பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



217



சமய வாழ்க்கையில் கொஞ்ச நாளைக்கு நடிப்பது நல்லதுதான். கண்ணை மூடி இருப்பது போலக் கொஞ்ச நாளைக்கு மூடினால்தான் மூடுகின்ற பழக்கம் வரும். ஆனால் நடிப்பதற்காக அப்படி மூடக் கூடாது. மூடிப் பழகுவதற்காக மூடலாம்; நடிப்பதற்காக மூடக் கூடாது. மாணிக்கவாசகர் சொல்கிறார். அடியார் எல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள். இவர் அப்பொழுதுதான் முதன் முறையாக வந்திருக்கிறார் அந்த வரிசைக்கு. ஏனென்றால் மாணிக்கவாசகருக்கு இந்த அனுபவமெல்லாம் அதிகம். இன்னோர் இடத்திலே இரக்கப் பட்டு, உரிமையோடு கேட்பார்;

‘பழஅடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த்
தாட்கொண்டாற் பொல்லாதோ’

என்று. இந்து மதத்திலே பழைய அடியராக இருப்பவர்கள், புதிய அடியார் வந்தால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது நான் கூட மலேயாவிற்குப் புது அடியாராகப் போய்விட்டேன். இவர்கள் கூட என்னை அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவர் இங்குப் பரம்பரையாக இருக்கின்ற அடியாராக இருக்கின்றார் என்று. ஆகவே, ‘பழ அடியீர்! பாங்குடையீர்! புத்தடியோம்! புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ’ என்கிறார். மிகவும் மாற்றுப் பார்ப்பார்கள்; தரம் பார்ப்பார்கள். இந்த அடியார்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்’

278