பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



259


றாகவும் உள்ளன. முன்னையதில் ஈடுபட்டுள்ள காதலர்கள் ஒருவர் தானும் இன்புற்று இன்னொருவருக்கும் இன்பம் தருகின்றார். இந்தக் காதல் ஆன்மக் காதல்; அழியாக் காதல். இத்தகு காதல் வாழ்க்கை காண்பதற்கு அருமையாகி விட்டது.

இன்றைய வீட்டு வாழ்க்கையில் கட்டுப்பாடும் பழக்கமுமே மிகுதியும் ஆட்சி செய்கின்றன. தூய காதல், அன்பு, ஆட்சி செய்யவில்லை. இங்குக் காணும் அன்புடைமை கானல் நீர் போன்றது. பின்னையதாகிய துறவு வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் தமக்கு இன்பம் நாடாமல் பிறருக்கு இன்பம் தரும் உழைப்பிலேயே இன்பம் காண்பவர்கள். அவ்வழி அவர்களுக்கு வரும் துன்பமும் கூட இன்பமாகும். இத்தகு சீலத் துறவு இன்று அருகிப் போய்விட்டது. வீட்டில் வாழும் குடும்பத் தலைவனுக்கும், வீடு கடந்த நாட்டில் வாழும் துறவிக்கும் அவனவனுடைய மனத்தில் அன்பு தோன்றாவிடில் பயன் என்ன? அன்பினைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளுதல் எளிமையில் முடியும். ஆயினும் தொடர்ந்து முயன்று வளர்த்து-பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். அன்பு பழகப் பழக ஆழமாகிறது. உறுதி பெறுகிறது; உய்தியைத் தருகிறது.

தன்னுடைய தோற்றம், தான் மட்டும் வாழ்தலுக்கல்ல-தனித்து வாழவும் முடியாது. எந்த ஒரு பொருளும் பிறிதொரு பொருளின் சார்பின்றி வளராது; வாழாது; பயன்தராது. ஆதலால், தன்னுடைய வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் மற்றவரிடத்து அன்பு பாராட்டுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்ளுதலேயாகும். அன்பினைத் தோற்றுவித்துக் கொள்ளும் முதல் நிலைக்களன் இதுவே. இந்த அறிவிலும், உணர்விலும் அன்பு தோன்றும். அன்பினை, உதவி, தொண்டு ஆகிய செயற்பாடுகளின் வழி செழுமைப்படுத்தி வளர்க்க வேண்டும். தோன்றிய குணம் செயற்பாடின்றி முடங்கிக் கிடக்குமாயின் அது வளர்வதில்லை.