264
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தாளாண்மையும், வேளாண்மையும் கணவனும், மனைவியும்போல, அறனும் அன்பும் போல, பண்பும் பயனும் போல. தாளாண்மை என்பது தாள்களோடு தொடர்புடையது. வேளாண்மை இதயத்தோடு தொடர்புடையது. தாளாண்மை என்ற தகைசான்ற பண்பில்லாதவன் வேளாண்மை செய்ய இயலாதவன். ஒரோ வழி செய்தாலும் தொடர்ந்து செய்ய இயலாது. விழுமம் துடைக்கும் அளவுக்குச் செய்ய இயலாது. வேளாண்மையில் செருக்குற்று விளங்க விழுமம் துடைக்கும் அளவுக்கு ஈதல் செய்ய வேண்டும். இல்லையென்ற சொல் வையகத்தில் வழக்கொழியும் வரை வழங்க வேண்டும். அதுவே முழுமையாக வேளாண்மை. இத்தகு வேளாண்மை அறம் இரக்க உணர்ச்சியினால்மட்டும் வரும் அறமன்று. தாளாண்மையில் ஓயாது ஈடுபட வேண்டும். தாளாண்மையில் முழு நிறை வெற்றி கண்டால் வேளாண்மையிலும் வெற்றி காணலாம். தாளாண்மையில் வெற்றி பெறாது வேளாண்மையில் மட்டும் வெற்றி பெற நினைப்பது, காலப் போக்கில் பிறிதொருவரின் வேளாண்மையை எதிர்நோக்கி வாழும் இரவலராக்கிவிடும். ஆதலின் தாளாண்மை பேணுக! தொடர்ந்து பேணுக! எல்லையின்றிப் பேணுக. பொருள்களைச் செய்து குவித்திடுக. வேளாண்மை செய்திடுக. இதுவே வள்ளுவம் தரும் வாழ்க்கைக் கலை.
‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.’
உடற்குறை துன்பமானது. உடற்குறை யுடையாரும் துன்பமுறுகின்றனர். உடற்குறையுடையாரைச் சார்ந்தோரும் துன்புறுகின்றனர். உடற்குறைறைய விடத் துன்பம் தரத்தக்கது ஒரு செயலை அரைகுறையாகச் செய்வது. அரைகுறையாகச்