பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
திருவள்ளுவர் காட்டும் அரசியல்

திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஓர் இலக்கிய மலர்; அரசியல் ஞாயிறு; பொருளியல்கூறும் புதுநூல்; நீதி நெறியினைக் காட்டும் நீதிநூல்; அறநூல்; உள்ளத்தை ஒட்டித் திருத்தும் உளவியல் நூல்; திருக்குறள் ஒரு முழுதுறழ் அறநூல். ஆயினும் ஏன்? திருக்குறள் இன்றளவும் ஓர் இலக்கிய நூலாகவே பயிற்றுவிக்கப்படுகிறது; பயிலப்படுகிறது. தவறினால் மிகச்சிலரே திருக்குறளை வாழ்க்கை நூலாகக் கண்டு பயின்று பயனடைகின்றனர். சமுதாயத்தின் அனைத்துத் துறையையும் திருக்குறள்நெறி தழுவும் போதே மன்பதை-உலகம் உய்யும்.

திருவள்ளுவர் ஓர் அரசியல்மேதை. ‘இலட்சிய அரசியல்’ படைத்த பிளேட்டோ. ‘சமுதாய ஒப்பந்தம்’ கண்ட ரூசோ, பொதுவுடைமைத் தத்துவத்தின் வாயிலாகச் சோவியத்துப் புரட்சியைக் கண்ட லெனின் ஆகியோர் வரிசையில் வைத்து, எண்ணத்தக்க அளவுக்குத் திருவள்ளுவரின் அரசியல் சிந்தனை உயர்ந்தது. ஆனாலும், வள்ளுவர்தம் அரசியல் சிந்தனைகள்-பொதுமைக் கருத்துகள் இந்த நாட்டினில் புரட்சிக் கனிகளாகக் கனியாமல் வள்ளுவம் வையகத்தை ஆளவில்லை.