பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வையகத்திற்குப் புகழ் சேர்க்க வள்ளுவத்தைக் கருவியாகப் பயன்படுத்துதல் திருக்குறள் பேரவையின் நோக்கம்.

அன்புகர்ந்து திருக்குறள் பேரவையைத் தொடங்குங்கள். நமது மரபின் வழிவந்தவர்களை, திருக்குறளே வாழ்க்கை மறையென நம்பச் செய்யுங்கள். திருப்பித் திருப்பித் திருக்குறளை ஓதச் செய்யுங்கள். திருக்குறள் தெளிவு வகுப்பு நடத்துங்கள்; வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணத் திருக்குறள் சிந்தனைச் சூழல்களை அமையுங்கள்; திருவள்ளுவர் காட்டும் தனக்குவமையில்லாதான் தாள்களை மட்டுமே தொழுங்கள். திருக்குறள் பேரவை தமிழகத்தைத் தழுவிய இயக்கமாக வேண்டும். அஃது உலகு தழுவியதாக மலரவேண்டும். ஆனாலும், ஆரவாரமாக வளரவேண்டாம். இலட்சியப் பிடிப்புடையதாக அமையவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்! இந்தத் தலைமுறையில் தமிழகத்தின் வாழ்வு திருக்குறள் வழியதாக அமையும் புரட்சியை நாம் செய்து முடிக்கத் திருக்குறள் பேரவை அமையுங்கள்! கருத்துப் புரட்சிக்கு வித்திடுங்கள்! திருக்குறளின் தத்துவங்கள் அனைத்தும் செயலுருவம் பெறப் பணி செய்வோமாக! வையகம் வள்ளுவம் வழியில் நடப்பதாக!