66
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணி விட்டுப் பின் வரக்கூடிய விருந்தினரையும் வரவேற்றுப் பேணக் காத்திருப்பவன் விண்ணகத்தாரால் பேணப் பெறும் நல்விருந்தினனாவான்.
வந்த விருந்தினர்களை ஏற்றுப் பேணியதால் ஏற்பட்ட பொருள் செலவினாலும், உடற்களைப்பினாலும் மனச் சோர்வு அடையாமல் கிளர்ந்தெழும் அன்புணர்ச்சியுடன் மேலும் விருந்தினர்களை எதிர்பார்த்து இருந்து வரவேற்பதே அன்பு, ஊக்கம் ஆகியவற்றை வழங்கும்.
மறுமைக்குத் துணை செய்வன உடைமைகளைக் கொண்டு செய்யும் அறங்களேயாம்.
‘இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.’
விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று அளவிட்டுச் சொல்லுதல் இயலாது; விருந்தினரின் தகுதியளவே அதன் பயன்.
விருந்தினரின் தகுதி பற்றியதாகப் பயன் மிகும்-குறையும் என்பது கருத்து.
1. விருந்தினரைத் தேர்ந்து தெளிதல் நன்று. பயன்கருதிச் செய்யலாமா? என்ற வினாவுக்கு விடையாகத் தீப்பயன் வாராது தவிர்த்தலுக்காகப் பயன் என்று உணர்த்தியதாகக் கொள்ளல் வேண்டும்.
2. விருந்தினர் நல்லோராயின் விருந்தளித்தாரைச் சிந்தனையால், உணர்வால், செயலால் வாழ்விப்பர். அஃதிலாதவர் பரிமாறிய உணவின் அளவுக் குறையையும், சுவைக் குறையையும் இன்ன பிற செய்திகளையும் எடுத்துக் கூறிப் பழி தூற்றுவர். உண்ணும் பொழுதே களவு முதலியன செய்யவும் துணிவர்.