திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்
77
தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குபவர்களுடைய நட்பை ஏழேழு பிறவியளவும் நினைப்பர் நன்றியறிவுடையோர்.
1. உனக்கு ஒரு துன்பம் வந்த பொழுது அதனைத் துடைத்து உதவி செய்தவர்களின் நட்பை, எப்பொழுதும் அன்புடன் நினைந்து போற்றி வளர்த்துக் கொள்க.
2. துன்பம் நீங்கியவுடன் துன்ப நீக்கத்திற்கு உதவி செய்தவரை மறந்துவிட்டால் மீண்டும் துணையாய் வருபவர்கள் இல்லாமற் போவர். அதனால், ஒருவர் செய்த உதவியை மறவாமல் பாதுகாப்பது பண்பினையும் வளர்க்கும்; மேலும் உதவியாளர்களைக் கொண்டு வந்தும் சேர்க்கும்.
<poem>‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.’</poem
>
ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறமன்று. தீமையை அன்றே மறப்பது அறமாகும்.
1. ஒருவர் செய்த உதவியை மறக்கக்கூடாது.
2. ஒருவர் செய்த நன்மைக்கு ஈடாக நாம் செய்யக்கூடிய நன்மையை அல்லது உதவியைச் செய்ய என்றும் அணியமாய் இருக்கவேண்டும்.
3. நமக்கு ஒருவர் செய்த தீமையை மனத்துட் கொள்ளாது அப்பொழுதே மறந்துவிடவேண்டும்.
4. நமக்கு ஒருவர் செய்த தீமைக்கு எதிராக நாமும் தீமை செய்யலாகாது.
5. நமக்கு ஒருவர் செய்த தீமைக்கு எதிர்த்தீமை செய்யாத ஒழுக்கம் அத்தீமையை மறப்பதன் மூலம்தான் பெற முடியும்.