பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 கருவி வானம் போல,
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னை”

கவிதை படித்து படித்து இன்புறத்தக்கது. இழிந்தோன் நிலையில் நின்று கொடு கொடு எனக் கேட்டல் இழிந்தது. அங்கனம் ஒருவன் கேட்க ஈயேன் என்று சொல்லி மறுத்தல் அங்ஙனம் கேட்டலினும் இழிவுடையதாகும். ஒருவன் தன்னுடைய நிலைகூறி தனக்கு எது தேவையென சொல்லிக் கேட்குமுன்னே அவனது தேவையை அவனது முக பாவத்தால் உணர்ந்து அவனுக்குத் தேவையானவற்றை வலிந்து கொள்க எனக்கொடுப்பது உயர்ந்தது. அங்ஙனம் அவன் கொடுக்க, அது வேண்டாம் என்று மறுத்துச் சொல்வது அக்கொடையிலும் மிக உயர்ந்தது. அலைகடல் ஆழத்திலும் அகலத்திலும் பெரிதாயினும் தண்ணிரை விரும்புவோர் கடல்நீரை குடிப்பதில்லை. அளவில் சிறியதாக விலங்கினங்கள் நீரை உண்ணச்சென்று உண்ணுதலின் மூலம் கலக்கிய சேறு கலந்த நீரை உடையதாயினும் உண்ணும் நீரையுடைய சிறிய குளத்தை நோக்கித்தான் பலர் செல்வர். அங்ஙனம் செல்வதனால் அக்குளத்திற்குச் செல்லும் வழிகளும் பலவாகும்.

புலவர் பரிசில் வாங்குதற் பொருட்டுச் சென்று பரிசில் பெறாது திரும்புவோராயின் பரிசில் தராதாரை இழித்துப் பேசும் வழக்குடையோர் அல்லர். பரிசில் பெறாமைக்குக் காரணமாகக் காலத்தையும் பறவை பறக்கும் சகுனங்களையுமே குறை கூறுவர். அதுபோல நீ என்னிடத்தில் எப்படி நடந்து கொண்டாயானாலும் உன்னை நான் வெறுக்கமாட்டேன், நீ வாழ்க! மழைபோல யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் நீ வாழ்க! என்பதே கவிதையின் பொருள். இக் கவிதையின் மூலம் கீழ்க்கண்ட சிறந்த கருத்துக்கள் வலியுறுத்தப் பெறுகின்றன.

1. இரந்து வாழும் நிலையில் யாசிப்பது இழிவு.