பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

111



சிறந்த அரசியல் முறை இல்லாத நாட்டில் இன்பம் இல்லை; அமைதி இல்லை; பாதுகாப்பு இல்லை. இத்தகு இழிநிலை வயப்பட அரசைப் பெற்றுள்ள நாடு, பாலைவனம் போன்றது. இதனை இளங்கோவடிகள் எடுத்துக் கூறுவதறிக.

“கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்வியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.”

(சிலம்பு 11:60-66)

என்பது சிலப்பதிகாரம்.

திருந்த மாட்டார்களா?

மக்கள், உருவத்தால் மக்கள் அல்லர். “உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்று” என்று திருக்குறள் கூறும். ஏன்? “மக்களே போல்வர் கயவர்” என்றும் திருக்குறள் மக்கட் பண்பில்லாதாரை ஏசுகிறது. மக்கட் பண்பில்லாதவர்கள், சிந்திக்கும் பழக்கம் இல்லாதவர்கள்; சிந்திக்க மறுப்பவர்கள் அறிவில்லாதவர்கள்.

ஆயினும் தங்களது அறியாமையையே அறிவு என்று நம்பி ஆட்டம் போடுபவர்கள், ஆணவத்தின் உருவங்களாகத் தலைதடுமாறி நடப்பவர்கள்.

இவர்களின் செவிகள் கேட்கும் திறன் உடையவை யல்ல. இவர்களின் செவிகள் தோட்கப் படாத செவிகள்! இவர்கள் பிறப்பால் மக்கள்! அறிவால், உணர்வால், ஒழுக்கத்தால் விலங்குகள்! இத்தகு மக்களை இழிவு உபசார நிலையில் நெடிய ஒலியோடு மாக்கள் என்று அழைத்தல் தமிழிலக்கிய மரபு.