பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

145



அதனால் ஊழ்வலிமை பயனைத் தந்தே தீரும் என்பது பெறப்படுகிறது. இளங்கோவடிகள் இக்கருத்தினை விளக்குகின்ற களம் எது? ஊழ்வினையின் ஆற்றலை முதன்முதலில் இளங்கோவடிகள் எடுத்துக் காட்டும் இடம் “கானல்வரி” யாகும்.

கோவலன், கானல்வரியில் உருவகம் அமைத்துப் பாடுகின்றான். தற்செயலாக அந்த உருவகம் கலைச் சார்புடையதாக அமைகின்றது. ஏன்? கானல்வரி பாடும் இடம் கடற்கரை. பாடும் காலம் இந்திரவிழா நிகழும் காலம்; முழு நிலா நாள்! அருகில் அவனை வாழ்விக்கும் மாதவி இருக்கிறாள். ஏன்? மாதவி மனம் மகிழத்தான் கோவலன் பாடவே தொடங்கினான்.

கோவலன் ஊழ்

கோவலன் பாடலைக் கேட்ட மாதவி, யாழை மீட்டிப் பாடத் தொடங்குகிறாள். மாதவி கோவலனின் உருவகத்தோடு போட்டி போடுகிறாள். ஆம்! அஃதொரு கலைப் போட்டிதான்!

கலைஞர்களுக்குக் கலைத்துறையில் தாழ்ந்து போகும் எண்ணம் வருவதில்லை. எனவே, மாதவியும் பாடுகிறாள்! மாதவியின் கற்பனை எந்தக் களத்திற் பிறக்கிறது? மாதவியின் கற்பனைக்கும் அவள் ஊழே காரணம். மாதவியின் சென்ற காலப் பழக்கம் என்ன? மாதவி வழிவழி கணிகையர்குல மரபினள். ஆயினும், ஒருநெறி நின்று, வாழ ஒருப்படுகிறாள். ஒருநெறி நின்று வாழ, அவளைக் கோவலன் பிரியாதிருக்க வேண்டும். கோவலன் தன்னைப் பிரிந்து விடுவானோ என்ற அச்சத்திலேயே மாதவி கோவலனை மிகவும் கவனத்துடனும் பரிவுடனும் தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறாள்.

“ஊடற் கோலமோ டிருந்தோ னுவப்பப்
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்