196
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஆதலால் கோவலன் மாதவியைப் பிரிந்ததற்கு மாதவி முற்றாகக் காரணமல்லள். ஆனாலும் சூழ்நிலை அவளை ஒரு காரணமாக்குகிறது.
இந்தச் சிறு களத்திலிருந்து மாதவி விரைந்து மீள முயற்சி செய்கிறாள். அம் முயற்சிகளைத் தொடர்வதை பார்ப்போம்.
மாதவியின் முயற்சி
கோவலனது வாழ்க்கையின் வலிமை, வலிமையின்மை, நல்லுணர்வுக்குறை ஆகியன மாதவி அறிந்திருந்ததே! ஆயினும் கலை, கவிதைப் போட்டிகளின் சூழ்நிலைகளில் மாதவி சோர்ந்துவிட்டாள். சோர்வின் விளைவாக கோவலன் பாடிய உத்தியைப் போலவே மாதவியும் பாடத் தொடங்கினாள்.
ஆனால், விளைவுகள் மோசமாகப் போயின. மாதவி இந்த விளைவுகளை எதிர்பார்க்கவில்லை. கோவலன் பிரிவு, அதிலும் வேனிற் காலத்தில் அவனது பிரிவு மாதவியை வருத்தியிருக்கிறது. கோவலனின் பிரிவுத் துன்பத்தால் மாதவி உயிரிழக்கும் சூழ்நிலை இல்லாது போவதற்குக் காரணம்
“மாலை வாரா ராயினும்
காலை காண்குவம் என”
மாதவிக்கு ஒரு நம்பிக்கையிருந்ததேயாம். அந்த நம்பிக்கையே அவளை உயிர் வாழச் செய்தது.
நம்பிக்கை மட்டும் இருந்து பயன் என்ன? நம்பிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சி வேண்டாமா? இடை நிகழ்வுகளால் நம்பிக்கை தளர்ந்து போகாமல் பாதுகாக்க வேண்டாமா? இவ்விரண்டு முயற்சிகளிலும் மாதவி ஈடுபடுகிறாள்.