பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கும்பகருணன் மரணம் புகழுடையதுதானே! ஆன்முலை அறுத்தல் முதலிய தீமைகளைச் செய்யினும் உய்தி உண்டு! செய்ந்நன்றி மறந்தார்க்கு உய்தியில்லை.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

(திருக்குறள் - 110)

என்று திருக்குறள் கூறுவதை அறிக. ஒரு தலைவன் ஆலோசனையின்றித் தீமை செய்தால் திருத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும். அங்ஙனம் திருத்த முடியாவிடில் அவருடன் இருந்து சாதலே அறம், ஒழுக்கம் என்பது கும்பகருணன் கொண்ட அறம், துணிவு. இலங்கை அரசு நிலையில்லாதது. நான் அதை விரும்பவில்லை. நான் என் அண்ணன் இராவணனுக்காகப் போராடி அவனுக்கு முன் சாதலையே விரும்புகின்றேன்! அதுவே எனது கடமை’ என்றான் கும்பகருணன்.

கும்பகருணன் மறைவு

கும்பகருணன், இராமனுடன் போர் செய்கின்றான். இராமனது அம்புகளால் அரக்கர் சேனை அழிந்தது. கும்பகருணன் கை கால்களை இழந்தான். இராவணனுக்கு அழிவு நேரிடப் போவதை நினைத்து வருந்தினான்! உடன் பிறப்புப் பாசத்தில் தோய்ந்த கும்பகருணன் தன்னுடைய அழிவு அண்மித்துக் கொண்டிருக்கும் பொழுதும் இராமனிடம் விபீடணனைக் காப்பாற்றுக! என்று கேட்கும் பாங்கு, கும்பகருணனிடத்தில் நமக்கு இனம் தெரியாத ஒரு மதிப்பை உண்டாக்குகிறது. மூக்கை இழந்து தன்னை மற்றவர்கள் பார்த்து நகைக்காமல் இருக்கத்தக்க வகையில் உடனே தன் தலையைக் கொய்து கடலில் வீசும்படிக் கேட்டுக் கொள்வது வீரத்திற்கு அணி செய்யும் வீரம் என்பது இராமகாதை நிலவும் வரையில் நிலவும்.