பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எல்லாரும் ஓர் நிறையும் பெறவில்லை! ஓர் விலையும் பெறவில்லை!

அடுத்து, பாரதிக்கு உரிமை-அதிகார உணர்வுகள் வருகின்றன. இந்திய மக்கள் அனைவரும் மன்னர்கள் என்று பாடுகின்றான்! மன்னர்கள் என்றால் இங்கு முடிசூடியவர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. இன்றையக் குடியாட்சியில் கூட சிலர் முடிசூட்டிச் செங்கோலேந்தி விழாக் கோலம் காட்டுகின்றனர். இல்லை! வேடிக்கை காட்டுகின்றனர். பாரதி, இந்த உணர்வோடு இதைக் கூறவில்லை. ஆளும் வாய்ப்பினைப் பெற்றவர் மற்றவரை மதித்தல் வேண்டும். மக்களாட்சியில் மக்களே ஆட்சிக்கு மூலம் என்ற உணர்வினைப் பெறுவதற்காக இங்ங்னம் பாடுகிறான். இன்றோ, ஆளுங்கட்சியின் அடிமட்டத்தி லிருக்கும் சராசரி மனிதர்கூட அதிகார போதை பிடித்து அலைகிறார். அதனால் கட்சிச் சார்பு இயல்பாக இல்லாதவர்களுக்குக்கூட ஏதாவதொரு கட்சியைப் பிடித்துக் கொள்ளும் ஆவல் தோன்றியுள்ளது. இது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் வலிமைக்கும் நல்லதல்ல. ஆதலால், பாரதியின் நூற்றாண்டு விழாவில் நாம் அனைவரும் பாரதி கண்ட சமுதாய அமைப்பை அமைப்போம் என்று உறுதி கொண்டு முயல்வோமாக!

"எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர்இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்"

பாரதி