பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

111


சோறு கிடைப்பது மட்டுமே வாழ்க்கையன்று. அதற்கும் அப்பால் ஆன்மா இருக்கிறது; உள்ளம் இருக்கிறது. உள்ளத்திற்குரிய அறம் இருக்கிறது. அந்த அறம் அழியக் கூடாது. உதியமரம் பெருத்து வளர்ந்து என்ன? உள்ளீடும் உள்ளீட்டில் உறுதியும் இல்லாத மரம் அது. அதாவது வயிரம் பாயாத மரம்! அதுபோலத் தமிழ்ச்சாதி தமிழ்க் கூட்டமாகிப் பயனில்லை. புறத்தோற்றத்தில் கவர்ச்சியிருந்து பயன் இல்லை. தமிழ்ச்சாதி உள்ளத்தால் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். உள்ளத்தால் ஓரினமாக உரம்பெறுதல் வேண்டும். பழந்தமிழ் நெறிகளைப் புதுமைப்படுத்தி, பொலிவுறுத்தி வாழ்ந்தால் தமிழினம் வாழும்! இல்லையெனில் விளக்கொளியில் விழுந்து மாளும் விட்டில்களைப் போலக் கவர்ச்சிகளில் சிக்கிச் சீரழியும். தமிழ், தமிழினம் என்றிருக்க வேண்டிய உள்ளார்ந்த உணர்வில் 'புகழ்' என்ற புல்லுருவி தோன்றி உள்ளிட்டை அழிக்கும். அப்புறம் நம்மவர் அயலவராகி விடுவர். அயலினத்தார் உறவினராகி விடுவர். விளைவு என்ன? தமிழினம் சிதையும்; சீர்ழிவு தோன்றும். இது பாரதியின் எச்சரிக்கை ஒருநூறு ஆண்டுகள் கழித்தும் கவிஞன் பாரதி தேவைப்படுகிறான்.

"தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மினோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழ்ச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்"


(தமிழ்ச்சாதி-11-9)