பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உள்ளத்திலே பெரும்பாலாகத் தோய்ந்து கிடக்கும் சில தீமைகள் ஒழிய வேண்டும் என்றும் வேண்டுகிறார்.

“மதிமூடும் பொய்மையிருளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்;
ஐயம்தீர்ந்து விடல் வேண்டும்-புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்"

என்று சொல்லி, "உன்னைக் கோடி முறை தொழுதேன். இனி வையத்தலைமை எனக் கருள்வாய்" என்று வேண்டுகிறார். "அச்சம் கீழ் மக்களது ஆசாரம்" என்று வள்ளுவர் பேசுகிறார். அச்சமும், சந்தேகமும் அதாவது நம்பிக்கையின்மையும் தலைவனைத் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவனாக ஆக்கிவிடுகின்றன என்பதை வையத்தலைமையை வேண்டும் பாரதி நன்றாக விளக்குகிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் பரபரப்பின்றி வரவரக் கண்டு, ஆராய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டியது தலைவர்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற பண்பு. இந்தப் பண்பாட்டைப் பாரதி பாஞ்சாலி சபதத்தில் அர்ஜுனன் மூலமாக உணர்த்துகிறார். சூதாட்டத்திலே தருமன் பாஞ்சாலியை வைத்துத் தோற்றுவிட்டான். பீமன் கொதித்தெழுகின்றான். மூத்தவன் என்ற மரபையும் மறந்து கடுஞ்சொற்களைக் கொட்டுகிறான். அச்சமயத்திலே அர்ஜுனன் பீமனைத் தடுத்து நிறுத்தி சினமான தீயறிவினால் அடாத வார்த்தைகளைச் சொல்லாதே என்று அமைதிப்படுத்தி பின்னர் அறம் பேசுகிறான். அறம் சொல்லுவதோடு அர்ஜுனன் நிற்கவில்லை. நியதி தத்துவத்தையும் உணர்த்துகிறான்.

"தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்”