பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


பாரதி தடத்தில் பாரதம்

தமிழ் மொழி காலந்தொறும் வளர்ந்து வந்திருக்கிறது. நாம் குறிப்பிடுவது மொழியின் வளர்ச்சியை மட்டுமல்ல: கருத்து வளர்ச்சியையும் கூட தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றை நோக்கின் இந்த உண்மை புலனாகும்.

தமிழ், இலக்கிய வளம் நிறைந்த மொழி: அறநூல்களும் நீதி நூல்களும் நிறைந்த மொழி: தத்துவ ஞான நூல்களும் தமிழில் நிறைய உண்டு. ஆதலால், தமிழர்கள் வளர்ந்து வந்துள்ளனர். தமிழ் மொழியும் வளர்ந்து வந்துள்ளது.

ஆயினும் இடைக்காலத்தில் ஒரு தேக்கம்! தமிழர்கள் பீடு இழந்தனர்; அரசுகளை இழந்தனர்; அடிமைகளாயினர்.

இருள் நிறைந்த நிலையில் ஓர் எழுஞாயிறு தோன்றுகிறது; பலர் புகழ் ஞாயிறு தோன்றுகின்றது. அதுதான் பாரதி! பாரதி, வரலாற்றில் இடம்பெற்ற கவிஞன் அல்ல-வரலாற்றை எழுதிய கவிஞன்!

பாரதி, உப்புக்கும் கூழுக்கும் பாடியவன் அல்ல! செத்த பிறகு கிடைக்கும் சொர்க்கத்துக்கும் பாடியவன் அல்ல. பாரதி, வாழும் மாந்தருக்குப் பாடினான்.