பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகவி பாரதியாரின் சிந்தனைகள் - II

261




தனி ஒருவன் யார்? ஒரு மனிதன் எண்ணிக்கையால் அல்ல! யாராலும் எவராலும் பேணப்படாத மனிதன்! அநாதை என்பது பொருள்! அவனுக்கும் சோறு இருக்க வேண்டும்! அவனுக்கும் சோறு இருக்கும் படியாகக் செய்வது சமுகத்தின் பொறுப்பு! உலகத்தின் பொறுப்பு! தனி ஒருவன் பட்டினி கிடப்பதற்கும் நொந்து வாழ்வதற்கும் சமூகமே காரணம்! சமூகமே பொறுப்பு! ஆதலால், தனி ஒருவனுடைய விதி எதுவோ, எப்படியோ? கவலை இல்லை! அந்தத் தனி ஒருவனுக்குச் சோறு தேவை! அதை இருக்கும் படியாகச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு! சமூகம் அந்தப் பொறுப்பை உணர்ந்து செய்யாவிடில் இந்த உலகம் அழிக்கப்பெறும் என்று பாரதி ஆவேசமாகப் பேசுகிறான்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

என்ற திருக்குறளிலிருந்து பாரதி வெகுவாக வளர்ந்திருக்கிறான். வள்ளுவர், "உலகியற்றியானைப்” பொறுப்பாளன் ஆக்குகிறார், பாரதி, உலகத்தையே பொறுப்பாக்கினான்.

ஆம்! மனிதன் ஒரு சமூகப் பிராணி! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாத, இங்ஙனம் மனிதர்கள் சமூகமாகக் கூடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை. ஒப்புரவினால் கூடி வாழும் வாழ்க்கைக்கு ஈடான வாழ்க்கை இந்த உலகத்திலும் இல்லை. புத்தேள் உலகத்திலும் இல்லை என்பது திருவள்ளுவர் கண்ட முடிவு. பாவேந்தன் பாரதிதாசனும் "உலகம் உண்ண உண்” என்றான். தனக்கென முயலாது பிறருக்கென முயலும். அறநெறி வாழ்க்கை மலர்ந்தால்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். பாரதியின் சிந்தனையில், கருக்கொண்ட பொதுமைச் சமுதாயம் காண்போம்.