பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிறகு, தனியொருவனுக்கு உணவிலை யெனில் என்று பாடிய பாரதிக்குப் பிறகு, உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என்று பாடிய பாரதிதாசன் பாரம்பரியத்திற்கு மேலாகத் தமிழ்த் தந்தை திரு.வி.க. பாடியிருக்கிறார்.

'அண்டையன் பசியால்வாட
அணங்கொடு மாடிவாழ்தல்
மண்டையன் குற்றமன்று
மன்னிடும் ஆட்சிக்குற்றம்'


என்று பாடுகிறார் தமிழ்த்தந்தை திரு.வி.க.


துரியோதனாதியரின் கொடுமைகளைப் பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் மிக அழகாகப் பேசுகிறார். மன்னனின் கொடுமையைப் பாரதிதாசன் பேசுகையில்,

'சிரமறுத்தல் வேந்தனுக்குப்
பொழுதுபோக்கும் சிறியகதை:
நமக்கெல்லாம் உயிரின் வாதை'

என்கிறார். இரண்டே வரிகளில், ஆதிக்கத்தின் பாற்பட்ட மன்னனை-ஆட்சிக்கேட்டை வன்மையாகச் சாடுகிறார்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'

என்றார் பாரதியார். இதன் பொருள் பல்கலைச் செல்வங்களையும் பிற மொழிகளில் படியுங்கள் என்பதன்று. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை நமது தமிழ்மொழியிலே ஆக்கித் தருதல் வேண்டும் என்றுதான் பாரதி கூறினார்.

"..துறைதோறும் நூல்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலவென நீரோடைபோல வெளி வரவேண்டும் என்கிறார் பாரதிதாசன். அதாவது பாரதியின் கருத்தை மேலும் தெளிவாகக் கூறுவதுபோல, படித்தவர்வெள்ளை வேட்டிக்காரர்-மேல் மட்டத்தில் வாழ்பவர்கள் ஆகியோர் எவருடைய தயவும் இல்லாமல் சாதாரணமான தமிழில்-பல்துறை நூல்களும் வெளி வரவேண்டும் என்கிறார்.