பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

323



கற்பது முதற்கடமை

பாவேந்தன், அறியாமைக்கு எதிரி கல்விக்குக் காவலன்! பலருக்கும் கல்வி நல்காதாரைக் கழுவேற்ற வேண்டும் என்று பாவேந்தன் பாரதிதாசன் பாடுகின்றான்!

"ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்"

என்பது பாவேந்தன் உள்ளக்கிடக்கை. குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையென்று கவிஞன் உணர்த்துகின்றான். ஆரம்பப் பாடசாலைக்குமுன் கற்கும் முதல்நிலை ஆரம்பப் பள்ளி நமது நாட்டில் இல்லை. வசதியுள்ளோரின் குழந்தைகளுக்கு "மாண்டிசோரி" கல்வித் திட்டத்தில் இடம் உண்டு. ஏழைத் தமிழ்க் குழந்தைகளுக்கு கிராமப்புறத் தமிழ்க் குழந்தைகளுக்கு அஃதில்லை. நமது நாட்டில் உள்ள சத்துணவு மையங்களை அப்படியே குழந்தைகள் பள்ளிக் கூடங்களாக உருவம் கொடுக்க வேண்டும். சின்னஞ்சிறு வயதில் குழந்தைகள் மூளையைப் பயன்தரத்தக்கவகையில் வளர்க்க வேண்டும். மூளையின் வளர்ச்சி சற்றேறக்குறைய 8 வயதில் நிறைவு பெறுகிறது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த வயதிற்குள் குழந்தைகளுக்கு மூளைப்புலனை இயக்கும் பயிற்சி, நினைவாற்றல், தேடும் முயற்சி ஆகியவற்றைக் கற்றுத் தந்துவிட்டால் அவர்கள் வாழ்வார்கள், வெற்றி பெறுவார்கள். நிகழ்காலத்திற்கே அழுது தொலைப்பதில் இன்று என்ன பயன் இருக்கிறது. நெடிய நோக்கோடு அடுத்த தலைமுறைக்கு வாழ்வளிக்கும் முயற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடத்தில் தாழ்வுணர்ச்சி வாராமல் பாதுகாக்க வேண்டும். குழந்தமை வயதில் கற்கும் பயிற்சி நல்லது. பயன்தரும். "இசையமு”தில் பாவேந்தன்.