பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கன்னலடா என்சிற்றுரர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூர்த்த துவரை யுள்ளம்!
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி. பக்.131)

இந்தப் பாடல் கூறும் மூன்று மனநிலைகளையும் வென்றெடுக்கும் நாளே புது உலகம் தோன்றும் நாள்!

பொதுவில் நடத்து!

பாவேந்தன் பாரதிதாசன் சண்டையில்லாத உலகத்தை விரும்புகின்றான். தன்னலம் தீர்ந்தால்தால் சண்டை ஒடுங்கும். தன்னலம் தீர்தல் எப்போது? எப்படி? நுகர்வுவழி தன்னலம் தீருமா! நுகர்தலே தன்னலம் பெருதற்குரிய வழி! நுகர்தலை மறுத்தல் எப்போது நிகழும்? மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற வேணவாத் தோன்றும் போதே நுகர்வு மறுத்தல் நிகழும். அப்படியானால் "ஓர்குலம்" என்ற உணர்வு,தேவை. இந்தக் கொள்கையை - கோட்பாட்டைப் பாவேந்தன் காரணகாரியங்களுடன் விளக்குவதைக் காணுங்கள்!

பாவேந்தன் பாரதிதாசன் ஆற்றல் மிக்க கவிஞன். ஆவேசம் மிக்க கவிஞன், "புவியை நடத்து பொதுவில் நடத்து" என்று ஆணையிடுகின்றான். ஆம்! புவிஈர்ப்பில் சிக்கித் தவிக்காமல், புவிஈர்ப்பு இழுக்கும் திசையில் செல்லாமல் - கீழே விழாமல் உயிர்ப்பாற்றலுடன் புவிஈர்ப்பை அடக்கி யாண்டு புவியை நடத்து! ஆம்! புவியை நடத்து! எல்லாருக்குமாகப் புவியைப் பொதுவில் நடத்து! வலியவர்களுக்காகவும் புவியை நடத்து! வலிமை யில்லாதவர் களுக்காகவும் புவியை நடத்து!

ஆம்! நிலம் பொது! வான் பொது! வளி பொது! வான்மழை பொது! அப்புறம் ஏன் வரப்புகள்: சுவர்கள்?