பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/459

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

447


ஆம்! நாளும் வாழ்க்கை தளிர்த்தல் வேண்டும்! வாழ்க்கை பட்ட மரம் போலானால் என்ன பயன்? நாளும் வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டும்! வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் வேண்டும்! நாளும் வளராத வாழ்வும் -ஒரு வாழ்வா? இது கவிஞர் குலோத்துங்கனின் வினா!

"வாழப் பிறந்தவர்கள் சாகக் கூடாது! செத்துக் கொண்டே நடைப்பினங்களாக வாழ்வதில் பயனில்லை! வாழ்க்கை ஒரு போர்க்களம்! நன்றே நடக்கும் போர்க்களம்!” - இது, தொ. மு. சி. ரகுநாதன் தந்துள்ள பஞ்சும் பசியும் புதினத்தின் ஊக்க உரைகளாகும்.

இந்த நூற்றாண்டில் அறிவுப் புரட்சிபற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அறிவுப் புரட்சி ஏற்பட்டால் மட்டும் போதாதென்பது உண்மையாகி வருகிறது.

உயிர்க்குலம் அனைத்துக்குமே அறிவு உண்டு. விலங்குகள், தாவரங்கள் ஆகியவைகளுக்கும் அறிவு உண்டு. இவைகளுக்கும் மனித குலத்துக்குமிடையே அறிவில் இடைவெளி கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனாலும் மானிடன் தான் பெற்ற கூடுதல் அறிவைக் கொண்டு அப்படியொன்றும் பிரமாதமாகச் சாதித்து விடவில்லை. மாறாகத் தீங்கைத்தான் செய்து வருகிறான்.

இந்த அறிவியல் அளவுக்குச் சான்றோர்களும் மாமேதைகளும் விதி விலக்காவர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தகுதி வேறுபாட்டை அறிவினால் மட்டும் நிர்ணயித்தல் கூடாது.

மனிதன் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும், செயல் முறைகளும் மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும். இந்த அளவைக்கு ஈடுகொடுக்கும் மாந்தர் எங்குளர்? யார் அவர்? பஞ்சும் பசியும் ஆசிரியர் தொ.மு.சி. ரகுநாதன், அறிவுப் புரட்சி பற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.