பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/484

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழுமிடமாக்கி விடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கி விடலாம். .......குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும்.”

(அண்ணாவின் சிறுகதைகள் பக். 94)

மீண்டும் நமது ஆலயங்கள் இழந்த பழம் பெருமையை அடைவது எந்நாளோ?

இனிய அன்புடையீா, சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் சிலவற்றைப்பற்றி சிந்தித்தோம். இந்த இலக்கியங்கள் ஆற்றல் வாய்ந்தன. சமுதாயத்தை உந்தி, முன்னோக்கிச் செலுத்தும் தன்மையுடையன.

ஆயினும் நம்மிடத்தில் இந்தச் சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் உருவாக்கும் கிளர்ச்சியை நடைமுறைப் படுத்தும் வாழ்வு அமையாமல் போனால் எங்ங்னம் மறுமலர்ச்சி தோன்றும்!

அன்புகூர்ந்து வளைந்து வளைந்து வராதீர்கள்! நேரிய நெடிய பார்வையொடு பயணத்தைத் தொடர்க! துணிந்து தொடர்க! எல்லாரும் கல்வி கற்றவர்களாக - எல்லாரும் எல்லாமும் உடையவர்களாக ஆகவேண்டும்.

இத்தகைய சிறந்ததொரு சமுதாயத்தை அமைக்க, கவிஞர் குலோத்துங்கன் சூளுரைத்து முன் செல்கின்றார். நாம் மட்டும் ஏன் தயங்கி நிற்கவேண்டும்? இளைஞர்களே, ஏன் தயக்கம்? எழுமின் ! குலோத்துங்கனின் சூளுரையைக் கேண்மின் !

"மாண்ச் சிறந்ததொரு வாழ்க்கைச் சமுதாயம்
படைக்கத் துணிந்தேன் நான் பாதையிலே காணும்
தடைக்கற்கள் யாவும் தகர்க்கும் வலியுடையேன்".

(குலோத்துங்கன் கவிதைகள் பக். 11)

என்று புதிய சமுதாயம் படைப்போம்?