130
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கோலும் புல்லும்ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே,
என்றருளியுள்ள பாடல் மூடச் சடங்குகளை வன்மையாகக் கண்டிப்பதையும் - மறுத்துரைப்பதையும் உன்னுக. இன்று நம்மை ஆட்டிப் படைப்பன இத்தகைய சடங்குகள் தாமே!
பரிபக்குவம்
அப்பரடிகள் வளர்ந்தவர். அப்பரடிகளின் பரிபக்குவத்தையும் படிமுறை வளர்ச்சியையும் அவர்தம் திருமுறைப் பாடல்களால் உய்த்துணர முடிகிறது.
அப்பரடிகள் வாழ்க்கையின் அருமைப்பாட்டை விளக்கிப் பேசிய வகையில் உள்ள பாடல் பலப்பல. “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!” என்று அருளியுள்ளமை எண்ணத் தக்கது.
ஆயினும் வாழ்வாங்கு வாழத் தவறின் அல்லலுண்டு என்பதை மறுப்பார் யார்? வல்லாண்மையில்லாதார் வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களை, விதந்து கூறுகின்றார். மனிதனை விரைவில் கெடுத்து மனிதனை ஏவல் கொள்ளுந்திறமுடையது வறுமை. இந்த உலகில் வறுமைக்கு ஈடான கொடுமை வேறொன்றும் இல்லை. வறுமை, மனிதனைத் தீமை செய்யத் துண்டும்.
வறுமை, மனிதனுடைய உணர்வைக் கெடுக்கும். நற்குணங்களையும் இழக்கச் செய்யும். “நெருப்பிற்குள் தூங்க முடியும். வறுமையோடு தூங்குதல் அரிது” என்கிறது திருக்குறள். வறுமை இருப்பது இழிவில்லை. வறுமையைக் கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு. ஆதலால், திருநாவுக்கரசர், “விரைந்தாளும் நல்குரவு” என்றார்.