பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

139



“தொண்டே முக்திக்கு வாயில்” என்றார் அண்ணல் காந்தியடிகள். ஆனால் உலகியல் நடப்பு என்ன? இந்த உலகில் பலரும் அதிகாரத்தையே விரும்புகின்றனர். தொண்டு செய்ய யாரும் முன்வருவதில்லை. இறைவன் ஆன்மாக்களைத் தொண்டு நெறியில் பூட்டித்தான் ஆட்கொள்கிறான். உண்டு வாழ்வது தொண்டு செய்தற்கேயாம்!

தொண்டு செய் தென்றும் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீ பணிசெய் மட நெஞ்சமே

(5.33.10)

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளமையை ஓர்க! அப்பரடிகள் மேற்கொண்ட திருத்தொண்டினைத் திருவீழிமிழலையில் எழுந்தருளியுள்ள பெருமான் “கைத்திருத்தொண்டு” என்று சிறப்பித்து வாசியில்லாக் காசு தந்தருளிய பெற்றிமையை அறிந்து தொண்டு நெறியை மேற்கொள்வோமாக!

சமயப் பொறை

ஆற்றல் மிக்க அன்பும் தொண்டுள்ளமும் பெற வேண்டுமாயின் “இவர் தேவர், அவர் தேவர்” என்று பூசலிடும் குணம் ஆகாது. சமயங்களுக்கிடையில் கூடப் பகையும் பிணக்கும் கூடாது. நமது சமயநெறி வளர்ந்த நெறி. பொதுமை நெறியும் கூட!

ஆயினும் சைவ நெறியின் கொள்கை, கோட்பாடுகளை உணர்ந்து கொள்ளாமல் ஆத்திரத்தில் எரிச்சலில் சிலர் புதுச்சமயம் ஒன்றினைத் தோற்றுவிக்கின்றனர். இது அவசிய மற்றது.

விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்