பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறையினையும் தம்மீது ஏற்றியே பாடும் இயல்பு குணக்குன்றனைய அப்பரடிகளுக்கு உண்டு. குற்றமிலராய் வாழ்தல் சிறப்பு. ஆயினும் குற்றம் வந்திடுமோ என்று அஞ்சி, அஞ்சி அறநெறியில் நின்றிடுதல் அதனினும் சிறப்பு.

உயிரினங்கள் அனைத்திற்கும் பசி உண்டு. பசியைத் தணித்துக் கொள்ள உணவினை நாடி முயலும் முயற்சி எல்லா உயிர்களுக்கும் உண்டு. உண்டு மகிழ்தலும் உண்டு; உறங்கிக் கழித்தலும் உண்டு; இன்ப துன்பங்களைச் சார்ந்து மகிழ்தலும் நோதலும் உண்டு. இவையனைத்தும் மிகுதிப்படுவது தீமையென்றாலும் உயிரின் இயற்கையாகும். இவை உயிரியல் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவும் ஆகும். இதனால், இந்தக் குணங்களால் வேறு இனத்திற்குக் கேடொன்றுமில்லை. மனிதனோ, இவைகளோடு மட்டுமில்லாமல் மற்ற உயிரினத்திடத்தில்லாத ஒரு பெரிய தீமையைப் பெற்றிருக்கிறான். அதுதான் பொல்லாங்கு பேசுதலும், பொல்லாங்கு செய்தலும் ஆகும். எந்தவொரு விலங்கும் வலிய மேற்சென்று யாருக்கும் தீங்கு செய்வதில்லை. மனிதனோ விலங்கிலிருந்து உயர்ந்து விளங்கிக் காட்சி தரவேண்டியவன். அணைத்து அள்ளித் தூக்கமுடியாத அளவுக்கு ஆசாபாசக் கடலில் வீழ்த்தி விடுகிறான்.

ஒரு சாதாரணப் புழு, உடலைப் பேணுவதில் மனிதனைப் போலவே அதிக அக்கறை காட்டுகிறது. ஆனால் அப்புழு பொல்லாங்கு பேசுவதில்லை; பொல்லாங்கு செய்வதில்லை! சிவனடியார் திருக்கூட்டம் என்பது பழுத்த மனத்தடியார் கூட்டமாகும். அவர்கள் நன்றுடையவனையே கருதுவார்கள்: அல்லன கருதார். செம்மணச் சான்றோராக விளங்கித் தம் மகவெனப் பல்லுயிரையும் ஒப்பப் பார்த்து, பரிந்தோம்பிக் காப்பவர்கள். இத்தகு அடியார்கள் குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக, புண்ணியத்தின் புண்ணியமாக விளங்கும் சிவபெருமானின் அடியார்கள். இவர்கள்