பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

191


போடுகிறது! அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும் நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சிலநாள் அடங்கும். வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே-அதனை அறியச் செய்தே பக்குவப்படுத்த வேண்டியதிருக்கிறது; அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பம். துன்பத்திற்குக் காரணம் அறியாமை. அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகள் வினை! நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காது என்பதுபோல, வினை நீக்கம் பெறும்வரையில் நிறைநல இன்பத்தையும் துய்க்க முடியாது. ஆதலால்,

முன்பிருந்த வினை தீர்த்திட்டு

என்கிறார்! தீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டும். இதனை வள்ளுவமும்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்று கூறுகிறது. அருணகிரியாரும்,

“பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்,” என்று கூறுகிறார். தீமைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்கவேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு, அந்த உயிரின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான்.”

அறியாமையில் உயிர் கிடக்கும்பொழுது உடலினுள் இருக்கும் உயிரும், மாற்றாரும் அறிய முடியாவண்ணம் நின்றருள் செய்யும் இறைவன், வினை நீக்கத்துக்குப் பிறகு