பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்னும் வளர்ந்தவர்கள் மேற்கூறிய சுவை நுகர்வினால் இன்பமுண்டு, துன்பமுமுண்டு, ஆக்கமுண்டு, அழிவுமுண்டு என்பதனை உணர்ந்து, தன்னை, தன்னுடைய வாழ்க்கையைச் சுவைத்து சுவைத்துத் திருத்தித் திருத்தி முழுநலம் அடையச் செய்தலில் ஈடுபடுவர். அவர்கள் தம் உயிரினும் இனியனாகிய இடைமருதீசனை எண்ணித் தம்முயிருடன் கலக்கச் செய்து இனிமை நலம் துய்ப்பர். வேறு எப் பொருளைச் சுவைத்தாலும் பசி நீங்காது. காமமும் எல்லைக்குட் பட்டதன்று. மேலும் மேலும் முறுகி வளர்வதே காமத்தின் இயல்பு. அதிகார மனப் போக்கும் எல்லைகளைக் கடந்து விரிவடைவதேயாம். பகையும், போரும் விகாரத்தின் விளைவுகள்; திருவருட் சுவையோ தீதற்ற சுவை. சுவைத்த அளவுக்குப் பயன் தரும். அச்சுவை முறுகி வளர்ந்தாலும் சுவைக்கின்றவனுக்கு நன்மையே. இச்சுவை, அழுக்காறு, அவா, வெகுளிகளுக்கு அப்பாற்பட்டது. ஆதலால் சுவைகளுக்கெல்லாம் தலையாயது திருவருட்சுவையே. இதனை அப்பரடிகள் படிமுறையில் விளக்கிக் காட்டுவது உணரத் தக்கது.

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே!

என்பது அப்பர் திருப்பாடல்.

18. களவுபடாத காலம்

இந்த உலகை-உலக இயக்கத்தை நடத்துவது காலம். காலம் என்னும் களத்தில்தான் மனிதன் வளர்கிறான்; வரலாறு உருவாகிறது. காலம் மிகவும் விழுமியது; போற்றத்தக்கது; பயன்கொள்ளத்த தக்கது. காலம் என்ற நெருக்கடியை இலட்சியமாக வைத்துத்தான் மனிதன்