பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உதடுகளில் பொங்கி வழியும் புன்னகை மூலமும் யாதொன்றும் தடை செய்ய முடியாவண்ணம் வெளிப்படுத்துகிறான்.

இத்தகைய சூழ்நிலையில் உறவு கலத்தலைப் போலப் பிற சூழ்நிலைகளில் முடியாது. அது மட்டுமின்றி ஒருவர் உண்பதை உடனிருப்பவன் விரும்புகிறான் என்பது தெரியாது போனால் உண்பவனுக்கு அவனையறியாமலே ஐய உணர்வும் கூச்சமும் தலைகாட்டுகின்றன; அதன் காரணமாகத் தயங்கித் தயங்கி உண்கிறான். அப்பொழுது அவன் உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமற் போகிறது. உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமல் உண்ணும் உணவு, நஞ்சாக மாறிவிடுகிறது. அதனால் நலம் கெடுகிறது; நோய் வந்தமைகிறது.

ஆதலால், உண்ணும்பொழுது உரையாடாது உண்ணுதல் நல்ல வழக்கம் அன்று; ஒழுக்கமும் அன்று; அது நெறியுமன்று; வாழ்வாங்கு வாழும் நெறியுமன்று; உடலியல் பேணும் நெறியுமன்று. அதனாலன்றோ, தாயுமானார். “உறவு கலந்து உண்ணக் கண்டீர்” என்று எடுத்தோதினார். உறவு கலக்க உரையாடல் இன்றியமையாதது. ஆதலால் பலர் கூடி உண்ண வேண்டும். உறவு கலந்து உண்பித்துச் சிரித்துப் பேசி மகிழ்வு சிறக்க உண்ண வேண்டும். ஆனால் உண்ணும் பொழுது உரையாடலை 'அரட்டைக் கச்சேரியாக' மாற்றி விடக் கூடாது. பயனற்ற சொற்களைப் பலர்கூடி உண்ணும் பந்தியில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அது மட்டுமின்றி, உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய அவல உணர்வுகளைத் தரக்கூடிய செய்திகளை மறந்தும் பேசக் கூடாது. இது நேர்மாறான பயனைத் தந்துவிடும். குற்றம் குறைகளை உணர்த்தும் நேரம், உண்ணும் நேரமன்று: உண்ணும்பொழுது மனித இயலைத் தூண்டி உயர்த்துதற்குரிய மகிழ்வும் ஊக்கமும் தரத்தக்க செய்திகளையும், உயர்வு தாழ்வுகளை விரிவுபடுத்தாத உறவு நெறிகளையும்