பத்திமை வாழ்க்கை எளிய ஒன்றன்னு. பத்திமை வாழ்க்கையை இன்று மேற்கொண்டொழுகுவோர் பலகோடியாக இருக்கலாம். ஆனாலும் அவர்களில் எத்துணை பேர் பத்திமைப் புனலில் தோய்ந்து எழுந்தவர்கள்? எத்துணை பேர் பத்திமைப் புனலில் தோய்ந்து எழும் தகுதியுடையவர்கள்? என்பதை எண்ணிப் பார்த்தால் ஒருசிலர் கூடத் தேறமாட்டார்கள். சின்னங்கள், சடங்குகள் ஆகியவை கருவிகளே தவிர ஞானமாகா. சடங்குகள் தொடக்க நிலையேயன்றி முடிவு நிலையாகா. இன்று நம்மிடையில் நிலவும் சமய வாழ்க்கை, சடங்கு நெறிச் சமய வாழ்க்கையே தவிர சீலம் நிறைந்த சமய வாழ்க்கையல்ல.
நம்முடைய உடலியல் வாழ்க்கை விந்தையானது. உடலியற் பொறிகள் - புலன்கள் வேற்றுமை இயல்புடையன. ஆயினும், நோக்கத்தால், பயன்படும் திறத்தால் ஒற்றுமையுடையன. உடலியற் பொறிகள் - புலன்கள் தோற்றத்தால் ஒருமைப்பாடுடையன. இந்த உடலியல் வாழ்க்கை பழக்கத்தால் பண்படுத்தப் பெறவேண்டிய ஒன்றாகும்; வழக்கத்தால் வளப்படுத்தப் பெறவேண்டிய ஒன்றாகும்.
கு.இ.VII.3.