வாழ்க்கை, அறியாமையில் தொடங்குகிறது. அறிவை நோக்கிப் பயணம் செய்கிறது. அறியாமை கடலினும் அகலமுடையது; ஆழமுடையது. அறிவு வர வர, அறியாமை சற்றே அகலும். முற்றாக அறியாமை அகலப் பலகாலம் ஆகும். ஏன்? பல பிறவிகள் எடுக்கவேண்டியது ஏற்படும். அதுவும், பெற்ற அறிவை மீண்டும் இழக்காமல் இடையீடின்றி அறிவை நோக்கிப் பயணம் செய்தால்தான் அறியாமை முற்றாக அகலும். அறியாமை முற்றாக அகன்ற உயிர். அறிவு மயமாகிறது; ஞானத்தின் வடிவம் எய்துகிறது. உயிர், ஞான நிலை எய்திய பிறகு அதற்கு விருப்புமில்லை, வெறுப்புமில்லை; இன்பமுமில்லை, துன்பமுமில்லை; பிறப்புமில்லை, இறப்புமில்லை. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்ப அன்பில் நிலைபெற்று மகிழ்கின்றது.
அறிவு, குழப்பமானது. அறிவின் இயற்கை அது வளர, வளர அறியாமையின் வன்மையைக் காட்டுவது; குழப்பத்தைத் தரக்கூடியது. இதுவோ அதுவோ என்று ஆராய்ந்து கொண்டிருப்பவன் அறிவின் ஆதித்தொடக்கத்தில் இருக்கிறான். இன்னும் தெளிவாகச் சொன்னால் அவன் ஒரு குழப்பவாதி. அவன் ஒரு பொழுதும் முடிவுக்கு வர