பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

103



திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரை ஏற்றுக் கொண்டான்! மாணிக்கவாசகரும் விருப்புடன் ஆட்பட்டார். இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன் தன்னை மாணிக்கவாசகருக்குத் தந்தனன். இங்கு எடுத்தது - தந்தது இரண்டும் இறைவன் செயலேயாம். மாணிக்கவாசகரின் விருப்பம் ஏதும் இல்லை! அதனாலேயே தனது விருப்பம் எல்லாம் இறைவன் தன் விருப்பமே என்று பாடுகின்றார். “வேண்டுவது உன்றன் விருப்பன்றே” என்பது திருவாசகம்.

இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன், தன்னை மாணிக்கவாசகருக்குத் தந்ததால் மாணிக்கவாசகரின் உடலை இடமாகக் கொண்டதால் முடிவே இல்லாத இன்பத்தை மாணிக்கவாசகர் பெற்றார்; அனுபவித்தார். திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாரமுதத்தை அண்ணித்தும் தேனித்தும் துய்த்தும் இன்புறுகின்றார். ஆனால், திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரை ஏற்றுக் கொண்டதால் என்ன பெற்றார்? ஆன்மாவிடமிருந்து ஆண்டவன் எதைப் பெறமுடியும்? ஒன்றுமில்லை என்றுதான் கூறுவர்.

கொள்வது - கொடுப்பதில் அல்லது எடுப்பது - தருவதில் இருபாலும் பயனில்லையானால் வாழத்தெரியாதவர், சாமர்த்தியமில்லாதவர் என்று பொருள்படும். இறைவன் சதுரப்பாடில்லாதவனா? இறைவனை விட மாணிக்கவாசகர் சதுரப்பாடுடையவரா? இல்லை! இல்லை! திருப்பெருந்துறையுறை இறைவனே சதுரப் பாடுடையவன்! எப்படி? மாணிக்கவாசகர் என்ற ஓர் அன்பரை ஆட்கொள்ள இறைவன் எடுத்த முயற்சியின் அளவு என்ன? குதிரைச் சேவகனானான்! உதிர்ந்த பிட்டைத் தின்றான்! கொற்றாளாகி மண் சுமந்தான்! பிரம்படிபட்டான்! அம்மம்ம! எவ்வளவு இடர்ப்பாடுகள்! இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையுறை சிவனிடம் பெற்ற