பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புலன்கள்! படைப்பாற்றல் உடையது உடல்! படைப்பாற்றலுக்குரிய உலகம்! அன்பு சுரக்கும் இதயம்! அம்மம்ம! இந்த மானுடப் பிறவியின் ஆற்றலை வியந்து எழுத ஏது சொற்கள்! அற்புதமானது! அற்புதமானது! மானுடமாகிய வாழ்நிலையை ஆன்மாவுக்கு இறைவன் தந்தருளினன். இறைவனால் யாதொரு குறையும் இல்லை! நமக்குத்தான் இறைவன் அளித்த மானுடப் பிறப்பின் அருமை புரியவில்லை! உலகம் பற்றிய அறிவு இல்லை! பொறிபுலன்களை ஆட்சி செய்யத் தெரியவில்லை. வண்டிக்காரன் மாடு இழுத்த வழிக்கு வண்டியை விட்டு விடுவது போல, நமது வாழ்க்கையை மனம் என்ற குதிரை இழுத்த வழி விட்டுவிட்டுத் துன்பத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு அழுகின்றோம்; புலம்புகின்றோம்! இந்த உலகம் துன்பமானது என்று முகாரி ராகம் பாடுகின்றோம். வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொண்டு ஒன்று கொலை செய்கின்றோம். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றோம்! ஏன் இந்த அவலம்?

இன்பமாக வாழ இறைவன் மானுடம் என்ற பதத்தை அருளினன். இறைவன்பால் குறையில்லை! என்றும் இன்பமாக வாழலாம். ஆனால் நாம் மானுடத்தின் இயல்பு அறியாது கெடுத்தோம்! கெட்டுப்போனோம்! இம்மையையும் இழந்தோம்! மறுமையையும் இழந்தோம்! இறைவனுக்கு உடைமைக்காரனாகாமல் பொறிகளுக்கே உடைமையானோம். நம்மை உடைமையாகப் பெற்ற பொறிகளும் புலன்களும் இச்சைக்கு ஆளாக்கி அடிமையாக்கி இந்த வாழ்க்கையை சொத்தையாக்கி விட்டன. நன்னெறிப் படுத்தும் பழைய அடியாரொடும் கூடுவதில்லை. மாறாக நகர் திரிதரு நம்பியருடன் கூட்டு! வறுமொழியாளரொடு கூட்டு! வம்பப் பரத்தரொடு கூட்டு! இதனால் வாழ்நிலை பின் தங்கிவிட்டது! என்னை ஒத்தார் எங்கோ சென்று உயர்ந்து விட்டனர். நமது நிலை பின் தங்கிய நிலை. வாழ்வு பின் தங்கியது மட்டுமா? நோய்க்கு விருந்தானோம்!