பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

157


மருதம், செவ்வழி (நெய்தல்) என்பன. தேவாரத் திருமுறைகள் பண்ணமைவு முறையில் அமைந்தவை. தேவாரத் திருமுறைகளில் இருபத்து மூன்று பண்கள் மட்டுமே அமைந்துள்ளன. திருவாசகம் இயற்றமிழ் போல யாப்பமைவில் தோன்றினாலும் திருவாசகத் திருவம்மானையைச் சீகாமரத்தில் பாடலாம். சீகாமரப்பண் காலைப் பொழுதில் பாட வேண்டிய பண். அதனாலேயே மாணிக்கவாசகர் ‘பண் சுமந்த பாடல்’ என்று பாடுகின்றார்.

சிவன் தமிழோடு இசைப் பாடல்கள் கேட்பதில் இச்சை மிகுதியும் உடையவன். நாள்தோறும் காசுகள் தந்து தமிழோடிசை கேட்டின்புறும் இயல்பினன். மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் பண் சுமந்த பாடல்கள். மாணிக்கவாசகரை இழந்து விட்டால் பண் சுமந்த பாடற் பரிசு கிடைக்காது.

மாணிக்கவாசகரின் பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்காகச் சிவபெருமான் வான்பழித்து இம்மண் புகுந்தனன். புவனியில் சேவடி தீண்டினன். குதிரைச் சேவகன் ஆயினன். மண் சுமக்கும் கூலிக்காரனாகி மண் சுமந்தான்; அடிபட்டான். புண் சுமந்தான். எண்ணரிய திருவிளையாடல்களை நிகழ்த்தினான். எல்லாம் மாணிக்கவாசகரைக் காப்பதற்கேயாம். மாணிக்கவாசகரிடம் பரிசாகப் பெற்ற பண் சுமந்த பாடல்களைத் தாமே தம் கைகளினால் படியெடுத்துக் கொண்டான். கடையூழியிலும் திருவாசகத்தை நினைந்து தன் தனிமையைக் கழிப்பதற்காக இக்கருத்தையெல்லாம் உணர்த்தும் பாடல் இது.

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியமன்ட லத்தீசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கவிமதுரை
மண் சுமந்து கூவி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்

(திருவம்மானை-8)