பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருட் பற்றிச் செய்கின்ற
பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா
தோணோக்கம் ஆடாமோ!

(திருத்தோணோக்கம்-3)

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூ தாய் கோத்தும்பீ!

(திருக்கோத்தும்பீ-4)

இன்றைய திருக்கோயில் வழிபாட்டு நிலையில் பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகளே பெருகி வளர்ந்து வருகின்றன. பொருட்பற்றிய பூசையிலும் கூடத் ‘தான்’ கெடாமல் செய்யும் பூசைகளே மிகுதி. தான் கெடாதது மட்டுமன்றித் தன்னுடைய தேவைகளை, இல்லை, இல்லை அவாக்களை அடுக்கி வைத்து அருள்பாலிக்கும்படி வேண்டிச் செய்யும் வணிகத் தன்மை வாய்ந்த பூசைகளே மிகுதி! “வேண்டத்தக்கது அறிவோய்” என்றும் “வேண்டுவதும் உந்தன் விருப்பன்றே!” என்றும் தொழுது அழும் பக்தர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை. இன்று எங்கும் அன்பு வழிபாடு அருகி, ஆசையினால் இயற்றும் வழிபாடே மலிந்து விட்டது. திருக்கோயில் சூழலும் ‘சிவகோசரியார்’களைத் தோற்றுவிப்பதாகவே உள்ளது. ‘கண்ணப்பர்கள்’ உருவாகும் சூழல் அறவே இல்லை. பழங்காலத்தில்