பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

183



இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கண்டு அறிய இயலாத சிவத்தினைக் காண முயன்றனர். அது, ‘பழச்சுவை’ என்றனர்; ‘அமுது’ என்றனர்; “அறிதலுக்கு அறிது” என்றனர். “அறிதலுக்கு எளிது” என்றனர். இங்ஙனம் அமரர்கள் தம்முள் முரண்பட்டு நின்று பேசினர்; விளக்கினர். ஆயினும் சிவம் உயிர்க்குலமெல்லாம் உய்தல் வேண்டி சிலைகளில் எழுந்தருளினன். இது அவன் திருவுரு இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம், உருவமன்று. இலங்கியங்களில் அகரம் முதலிய நெடுங் கணக்கு இருப்பினும் பயன்படுமாற்றால் இலக்கியம் என்றே போற்றுகின்றோம். இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளை, இரும்பு என்று கூறுவதில்லை. பயன்படு நிலை கருதி ‘ஒலி பெருக்கி’, ‘மண்வெட்டி’ என்று கூறுவதே மரபு. அதுபோல இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம் சிலையாக இருக்கலாம். ஆயினும் பயன்பாடு வழிபாடு ஆதலால் அது திருவுருவம் அல்ல. இறைவனேதான்!

“திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவன் எனவே கண்டவர்க்கு சிவன் உறைவன் ஆங்கே!” - இது சாத்திரம் காட்டும் உண்மை. இறைவன் எண்ணற்ற ஆன்மாக்களை ஆட்கொள்ளும் பணிக்காகவே திருவுருவத்தில் எழுந்தருளுகின்றான். திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் முன்னிலையில் பணிகேட்டு விண்ணப்பித்தலே மரபு. அண்மைக் காலமாக இந்த மரபு அறவே மாறி நுகர் பொருள்களை இரந்து கேட்கும் பழக்கம் தோன்றிவிட்டது. இன்று நமது சமயப் பிரார்த்தனைகளில் பணி செய்ய விரும்பும் விண்ணப்பம் அறவே இல்லை. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை மன்னனிடம் “எது எமைப் பணிகொளு மாறது கேட்போம்” என்றே வேண்டுகிறார். பணி செய்தலே உய்யும் நெறி. “கொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்று திருமுறை கூறும். இந்நெறியை உணர்த்தும் மாணிக்கவாசகர் பாடலை நினைத்து இறைவனை வேண்டுவோம்.