204
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இருப்பது உண்மையாகிறது. மெய்யன்பு என்பது காரண காரியங்களைக் கடந்த அன்பு. தூண்டுதல் தேவைப்படாத அன்பு. அன்பு, அன்புக்காகவே! இந்த அன்பு நெறி நின்று வாழ்வதில் துன்பம் வரினும் அன்பு குறையக்கூடாது. அன்பு வளர வேண்டும்.
இடர்க ளையா தேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடர் உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்னெஞ் சவர்க்கு.
என்று அம்மையார் பாடினார்.
இந்த அன்பு நிரந்தரமானதாக இருக்கவேண்டும் என்பது மாணிக்கவாசகரின் பிரார்த்தனை.
பரந்து பல் லாய மலரிட்டு முட்
டாதடி யே இறைஞ்சி
இரந்தவெல் லாம் எமக் கேபெற
லாம் என்னும் அன்பருள்ளம்
கரந்து நில் லாக்கள் வனே நின்றன்
வார்கழற்(கு) அன்(பு) எனக்(கு)
நிரந்தர மாய்அரு ளாய் நின்னை
ஏந்த முழுவதுமே!
அன்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும். அந்த அன்பும் ஆற்றுப் புனல்போல் கரைகளை- சம்பிரதாயங்களை உடைத்துக்கொண்டு ஓடவேண்டும். அன்பெனும் ஆறு கரை புரள நின்றுயர்ந்தவர்கள் மாணிக்கவாசகரும் கண்ணப்பருமாவர். அச்சமிலாத மாணிக்கவாசகர் அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுகிறார். அன்பிலாதவர் உறவு, நட்பு பனை மரத்து நிழலனையது; கானல் நீர் போன்றது. பனைமரத்து நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்க இயலாது; முடியாது. கானல் நீர் தாகம் தீர்க்காது. அன்பிலாதவருடன் பழகி அவர்களைச்