பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

217


“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”

என்றும் கூறுவர். உணவு, உயிராகாது. உணவால் உயிரைக் கொடுக்கவும் இயலாது. உடலில் உயிரைக் காத்து வைத்து வாழ்வளிப்பது உணவு.

போகம்- இன்பம். மாணிக்கவாசகர் “போகமாம் பூங்கழல்கள்!” என்று பாடுகின்றார். போகம் என்பது விரிந்த பொருளைத் தரவல்லது. போகம்- இன்பம். உயிர்க்குலத்துக்கு இன்பம் தரும் வாயில்களும் இன்பம் தருபவையும் பலப்பல. ஆன்மாக்கள் வளர்ச்சி அடைய, அடைய இன்பத் துறைகளும் மாறும். குழந்தைப் பருவத்தில் தேவை விளையாட்டுப் பொருள்கள்; இனிப்பு மிட்டாய்கள்! இளமையில் தேவை கல்வி கற்றோர் வாய்க் கேட்டல், வாலிபப் பருவத்தில் காதலின்பம். வாலிபப் பருவத்தில் இன்பத் துறைகள் ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்பப் பலப்பல வாகிவிடும். சாதனை செய்தல் ஆகியவற்றிலும் இன்பம் காண்பர். முதிர்ந்த ஆன்ம முதிர்ச்சி நிலையில் இறைவன் கழலேத்தும் இன்பத்தையே இன்பமெனக் கொள்வர். “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!” என்றும் மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ளார்.

இறைவனுடைய திருவடி யின்பமே இன்பம். உயிர்கள்-ஆன்மாக்கள் அடையும் முடிவிலா இன்பம் திருவடியின்பமேயாம். திருவடியின்பத்தை ‘ஆனந்த வெள்ளம்’ என்று கோவையார் போற்றும்! திருவடியின்பமாகிய ஆனந்த வெள்ளம் வற்றாது; முற்றாது. அந்த ஆனந்த வெள்ளத்தினை வழங்குவதே ஆடல்வல்லானின் கூத்து!

‘பூங்கழல்கள்’- மலரின் தன்மையுடைய திருவடிகள் என்பது பொருள். மலர், மங்கலப் பொருள்; மணமுடையது; தேன்பிலிற்றும் இயல்புடையது; மென்மையானது. ஆணவக் காரிருளினால் கட்டுண்டும் ‘யான்’ ‘எனது’ என்ற செருக்கில் சிக்கித் கொண்டும் தலையால் நடக்கும் ஆன்மாக்களை,

கு.இ.VIII.15.