பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13


எல்லாமே இறைவனின் திருக்கோலம்


மாணிக்கவாசகர் நிலத்தியல்பும் - ஐம்பூதங்களின் இயல்பும் உணர்ந்த பேரறிஞர். இதனைத் திருவண்டப் பகுதி நமக்கு நன்றாக விளக்கிக் காட்டுகிறது. இறையுணர்வுடையோருக்கு இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருளும் இறைவனாகவே காட்சியளிக்கும்-திருவருளைப் படித்தறியும் பெரும் புத்தகம் இந்த உலக இயற்கை. உலகம் வேறு - இறைவன் வேறல்ல, உலகமே அவன்; அவனே உலகம்; எல்லாமே திருவருள் மயம். எல்லாவற்றிலும் இறைவனுடைய திருவோலக்கக் காட்சி! திருஞானசம்பந்தர் தன்னுடைய திருமுறையில் இயற்கைக் காட்சி நலங்களை வியந்து பாடிப் பரவுகின்றார். மாணிக்கவாசகரும் இறைவனை நினைந்து வாழ்த்த நினைக்கின்றார். ஆனால் எங்ஙனம் வாழ்த்துவது? எந்தச் சொற்களைக் கூறி வாழ்த்துவது என்று தெரியாமல் திகைக்கின்றார். ஏன்? ஒன்றைச் சொல்லி வாழ்த்தினால் பிறிதொன்று விடுபட்டுப் போகுமே என்ற கவலை! எல்லாமே இறைவனின் திருக்கோலம்!

மாணிக்கவாசகர் இயற்கையையும் இயற்கையின் இயக்கத்தைப் பற்றியும் நன்கு உணர்ந்தவர். இயற்கை முழுவதும் தில்லைப்பெருமானின் திருவுருவமே என்னும் கருத்துடையவர். காணும் பொருளெல்லாம் கயிலாயனே என்ற உறுதி மிக்க உள்ளமுடையவர் அவர்.