பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லாமே இறைவனின் திருக்கோலம்

287



திருவாசகத் தேனில் ஒரு துளியை உங்கள் முன் வைக்கிறேன் அள்ளிப் பருக.

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”

இறைவன் வானாகவும், பூமியாகவும், காற்றாகவும், ஒளியாகவும், உடலாகவும், உயிராகவும், உண்மையாகவும், இன்மையாகவும், தலைவனாகவும் யான் என்றும் எனது என்றும் கூறுகின்றவர்களைக் கூத்தாட்டுகின்றவனாகவும் நிற்கின்றான். இங்ஙனம் காட்சி தரும் இறைவனை என்ன சொல்லி எப்படி வாழ்த்துவேன் என்று ஏங்கித் தவிக்கின்றார். இறைவன் ஐம்பூதமாய் நின்றருள் வழங்குகின்றான்; உயிர்களின் இன்பநுகர்ச்சிக்குக் காரணமாய் உடலாக விளங்குகின்றான். உயிர்க்கு உயிராக நின்றருள் செய்கின்றான். தனக்குவமையில்லாத தலைவனாக விளங்குகின்றான்; அகப்பற்றும் புறப்பற்றும் உள்ளவர்களை ஆட்டுவித்து அனுபவத்தைக் கூட்டுவிக்கின்றான். இறைவனுடைய புகழ் அளவிடற்கரியது; சொற்களைக் கடந்தது. காணும் பொருளெல்லாம் இறைவனாகவே காணும் காட்சி திருவருள் காட்சி; வரகுணபாண்டியன் வரலாறு நாடறிந்த ஒன்று; கற்றறையில் வீழ்ந்து கிடந்த வேப்ப விதைகள் எல்லாம் சிவலிங்கங்களாகவே காட்சியளித்தன. “குற்றம் நீ! குணங்கள் நீ!” என்று அப்பரடிகள் கூறுகிறார். இங்ஙனம் எல்லாவற்றையும் திருவருள் வயத்ததாகக் கருதுவதும் - வாழ்வதும் - பாராட்டுவதும் இன்ப அன்பைப் பெருக்கும், உலகை ஒரு குடும்பமாக்குவது அமைதியை விளைவிக்கும். பகைமை நீக்கிப் பண்பைப் பெருக்கும். காழ்ப்பு நீங்கிக் கருணை வளரும். துன்பங்கள் தொலையும், இன்பம் பெருகும். திருவாசகத்தில் உள்ள இப்பாடல் எல்லாச் சமயத்தாரும் ஓதுதற்குரிய முறையில் பொதுமை நலம் செறிந்து விளங்குகிறது. உண்மையான - ஆழமான சமயநெறி பொதுமை நலம் பெற்றே விளங்கும்.