374
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஆதலால் ஆசையுடன் இறைவனை வணங்கற்க; திருவடிகளை வாழ்த்துதலையே உடமையாகக் கொள்க; பட்டினத்தார் இறைவனைப் பேசு, பேசு, பேசு என்று பன்முறை கூறுகின்றார் ஏன்?
“பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி”
இன்று, வாய் படைத்தவர்கள் எல்லாம் பேசத்தான் செய்கின்றனர். ஆனால் ஐயகோ! அவர்கள் பேசுவது பேச்சா? அவர்கள் ஏன் ஊமையராய்ப் போயிருக்கக் கூடாது. பேச்சு, இன்று தூற்றலாக விளங்குகிறது. இது நன்றன்று.
ஆண்டாள் நாச்சியார் “தீக்குறளைச் சென்றோதோம்” என்று விளக்கிய கோள் இன்று நடமாடாத இடம் எது?
வாழ்க்கை விரைந்து ஓடுகிறது; ஓட்டைக் குடத்தில் நிரப்பிய தண்ணீரைப் போல! இறைவனின் புகழை இன்றே பேசு; இப்பொழுதே பேசு; இந்நொடியிலேயே பேசு; எப்பொழுதும் பேசு! என்றும் பேசு! என்று உயிர்களை விரைவுணர்ச்சியில் ஆற்றுப்படுத்துகின்றார்.
திருவாசகம்,
“பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசி”
என்று கூறும். இறைவனைப் பேசுதல் எளிதன்று. தடைகள் தோன்றும். உலகியல் சூழும்; பலகாலும் பேசிப் பழகி விட்டால் இறைவனையே பேசுதல் எளிதாகும்.
சுந்தரர்,
“நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே”
என்றார். இறைவனைத் தொடர்ந்து நினைத்தலையும், பேசுதலையும் நமது வழக்கமாகக் கொள்வோமாக.