பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/402

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எல்லா உயிர்கள் மாட்டும் ஒத்தநிலையில் அன்பினைக் காட்டாமல் ஓரவஞ்சனை செய்தவர்கள் நேற்றும் கெட்டார்கள் - கைகேயி சான்று. இன்றும் கெட்டவர்களை நாடு அறியும்! ஆதலால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பினைக் காட்டுக! கருணையைக் காட்டுக என்று வள்ளுவம் பேசுகின்றது.

“அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை; இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்”

(243)

என்று வள்ளுவர் கூறுகிறார்.

பிற உயிர்கள் அஞ்ச வாழ்வோர், தன்னுயிர் அஞ்ச வேண்டிய காலமும் வரும். இவர்களால் வருத்தப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் எதிர்வினையாக இவர்களுக்குத் துன்பம் தரலாம். அவர்கள் தரமுடியாத நிலையில் இருந்தாலும், தர விரும்பாதவர்களாக இருந்தாலும்கூட நீதிவழிப்பட்ட அறஇயல் இவர்களுக்குத் துன்பத்தைத் தந்தே தீரும். “அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு” என்பது குறள்.

ஆதலால், எல்லா அறங்களிலும் மிக்குயர்ந்தது கொல்லாமை. உடற் கொலை மட்டும் கொலையன்று. உயிர் உரிமைகளைப் பாதுகாக்காது வாழ்வதற்குரிய வாய்ப்புகளை வழங்காது வாழ்விழக்கச் செய்தலும் கொலையே யாம். ஓர் உயிர் வயிறு வளர்க்க நூறு, ஆயிரம் உயிர்கள் கொல்லப்படுகின்றன.

கொல்லா நெறியைத் திரும்பத் திரும்ப பாரதத்தில் புத்தர், மகாவீரர், வள்ளுவர், அப்பர், அருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியும் உயிர்க்கொலை நீங்கின பாடில்லை. புலால் உணவு விட்டொழிந்த பாடில்லை. எங்கும் கொலை உணர்வு கூத்தாடுகிறது. கொலை செய்வார் நெஞ்சத்தில் திருவருள் நோக்கு பதியாது. ஏன்? உலகியலும் வறட்சியுறும். பாரதி,