பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொல்லாமை வேண்டும்

391


“நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டார்;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டார்;
சீரான மழைபெய்யும்; தெய்வம் உண்டு!
சிவன்செத்தா லன்றி மண்மேல் செழுமை உண்டு!

என்று பாடுகின்றார்.

மானிட உலகம் கொல்லாமையை மேற்கொண்டொழுகுதல் வேண்டும். உடற்கொலை, உயிர்க்கொலை, அறிவுக்கொலை, உணர்வுக்கொலை ஆகிய எந்தக் கொலையும் கூடாது.

இன்று அறிவியல் கொடிய கொலைக் கருவிகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. போர்ப்பயம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. போர் தோன்றின் உயிர்க்குலம் அனைத்தும் அழிந்து போகும். ஆதலால் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! ஒருபுறம் கொலை! மற்றொருபுறம் தொழுகை! இதனால் என்ன பயன்? கவிதைகளில் முரண் தொடை இனிமையாக இருக்கலாம். வாழ்க்கையில் முரண்பாடுகள் நல்லனவுமல்ல; நாகரிகமும் அல்ல. ஆதலால், பட்டினத்தார் நெறிவழி கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகுவோமாக!

வலிமை இல்லாதாரின் உரிமைகளைப் பாதுகாப்பதே வல்லமையுடையாரின் சீலம்; நோன்பு! அப்பொழுதுதான் அருள் பழுத்த மனம் கிட்டும்! அப்பொழுதுதான் கடவுள் தொழுகைக்கும் பொருள் உண்டு. உயிர்க் கொலை தவிர்மின்! புலால் உணவைப் புறக்கணிமின்! யாருக்கும் நோதக்கன செய்யன்மின்! எவ்வுயிர் மாட்டும் அன்பினைச் சொரிமின்! வையகம் உண்ண உண்மின்! உலகம் உடுத்த உடுத்துமின்! கடவுள் பெயரால் கொலை தவிர்த்து பட்டினத்தார் நெறியில் புது உலகம் அமைப்போம்! பொது உலகம் சமைப்போம்!