பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/415

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமரகுருபரரின் உயிர்க்கொள்கை

403



அடுத்து உயிர்-உய்தற்குரியது. உயிர்கள் இன்பத் துய்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. உயிர்களுக்குத் துன்பம் செயற்கையே. இயற்கையில் உயிர்கள் இன்பத் துய்ப்பிற்குரியவை; இன்பமானவை. ஆதலால் நற்றமிழ்க் குமரகுருபரர் “இன்னுயிர்” என்றே உயிர்களைக் குறிப்பிடுகின்றார்; அழைக்கின்றார். இன்பம் பலவகையின. உயிர்கள், அறிவும் தெளிவும் இன்மையின் காரணமாகத் துன்பமானவற்றை துன்பம் கலந்த இன்பங்களைக்கூட இன்பமென்றே கருதுகின்றன. என்றும் எப்போதும் எல்லோருக்கும் இன்பமாயிருப்பதே இன்பம். அது மட்டுமல்ல, இன்பத்திற்கு எல்லையில்லை; வளர்ச்சியுண்டு. பேரின்பம் வரையில் வளரும். ஆங்கும் எல்லையில்லை; முடிவில்லை. அதனால் ‘ஆரா இன்பத்தேன்’ என்று குறிப்பிடுகின்றார். குமரகுருபரர் இதனை,

“அடுத்தவின் வயிர்கட் களவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே”

என்பார். இறைவனின் குறிக்கோள் மன்னுயிர்களுக்கு இன்னருள் பாலிப்பதேயாம். உயிர்கள் என்றும் உள்ளவை; உயிர்கள் பலப்பல; உயிர்கள் இன்ப இயல்பின, உயிர்களின் குறிக்கோள் ஆரா இன்பம் பெற்றுத் துய்ப்பதுவேயாம். பேரின்ப நுகர்வே உயிர் வாழ்க்கையின் பயன். இதனைக் குமரகுருபரர் ‘இன்பப் பயன் கொள்ளும் பொழுது உயிர்கள் சார்பினால் வந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுகின்றன’ என்பார்.

உயிர், சிறப்புறு நலன்கள் பெற, உணர்வு தேவை. உணர்ச்சி வேறு; உணர்வு வேறு. உணர்ச்சி உடற் சார்புடையது. உணர்வு உயிர்ச் சார்புடையது. உணர்ச்சி தற்சார்புடையது; தீமையை விளைவிப்பது. உணர்வு, பிறர் நலச் சார்புடையது; தியாக இயல்பினது; நன்மையையே செய்வது. ஆதலால் உயிர்கள் உணர்வில் சிறந்து விளங்குதல் வேண்டும். இதனைச் செந்தமிழ்க் குமர குருபரர்,