பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/416

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


..............உயிரால்
வாலத் துணர்வு நீர் பாய்ச்சி
வளர்ப்பார்க்கு ஒளிபூத் தளிபழுத்த
மலர்க் கற்பகமே’

-மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்–44

என்று விளக்குகிறார். உணர்வில்லையெனில் உயிர் இயல்பில் குன்றி, உடலியக்கம் வளர்ந்திருக்கிறது என்பது குறிப்பு. உயிருக்கு உடல் கருவி. கருவிகள், பயன்படுத்துபவர்களை விஞ்சிவிட்டால் விளையக்கூடியது தீமைதானே!

உயிர்களுக்கு, உயிர்க்குயிராக இருந்து அறிவு நிலையில் உணர்த்தி உய்த்துச் செலுத்தும் பொருள் கடவுள். “உயிர்க்கு உயிராம் மதுரேசர்” என்பது மதுரைக் கலம்பகக் கவி. உயிர்க்கு உயிர் என்றால் ‘உயிர்’ என்றே பொருள் கொள்ளக் கூடாது. உயிரியக்கத்திற்கு-உயிர் மேம்பாட்டுக்குத் துணையாக இருக்கும் ஆற்றல் வாலறிவு. “ஊனாய் உயிர்க்கு உயிரானாய்” என்ற முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் வரியையும் எண்ணுக.

உயிர்கள் தழைத்து வளரவேண்டும். உயிர்கள் தழைத்து வளரத் தடையாய் அமைந்துள்ள ஆணவக்காடுகள் அகற்றப் பெறுதல் வேண்டும். ஆணவம் என்றும் உள்பொருள்; உயிருடன் இருப்பது. ஆணவத்தை அகற்றுதல் இயலாது. ஆணவத்தின் கேட்டை அடக்கி வைக்கலாம். அவ்வளவு தான். ஆணவத்தின் தூண்டுதல் வழி, வினைகளையும், வினைகள் வழி, ஊழ் ஆகிய படிகளையும் கடந்து, உயிர்கள் வளர்தல் வேண்டும். உயிர் தளிர்த்து வளர்தல் என்பது அருட்புனலில் தளிர்த்தலாகும். ‘உயிர்ப் பயிர் தழைப்ப’ ‘கண்டுயிர் தளிர்த்த’ என்ற அடிகளைப் பலகாலும் படித்திடுக.

செந்தமிழ்க் குமரகுருபரர், தமது பிரபந்தங்கள் முழுவதிலும், உயிர்கள் என்றும் உள்ளவை, உயிர்கள் பலப்பல, உயிர்கள் வளர்வதற்கு உணர்வு தேவை; உணர்வுக்குத் துணையாயிருந்து தூண்டிச் செய்வது - ஆற்றுப் படுத்துவது கடவுள் என்பதை உணர்த்துகின்றார்.