பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/421

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28


நற்சொல் எது?


சொல், பொருளுடையது. பொருள் என்பது பதவுரை மட்டுமன்று. சொல்லின் பொருளை உணர்ந்து அடைதற்குப் பதவுரை ஒரு வாயிலே. அங்ஙனமாயின், சொல்லுக்குப் பொருள் யாது? சொல்லினால், உயிர்களின் அனுபவத்திற்குரியனவாக விளையும் பயனே சொல்லுக்குப் பொருள்.

“பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும்” என்பார் குமர குருபரர். ஆளுடைய அடிகளும் தாம் அருளிய திருவாசகத்திற்குப் பொருள், அம்பலத்தே ஆடல்வல்லானின் திருவடிப் போதுகளே என்றார். இங்கனம் சொல்லுக்குப் பொருள் காணும் ஆர்வம், இன்று நாட்டிடையில் இல்லை.

பொதுவாகப் பொறிகளைக் கடந்த புலன்களுக்கும், புலன்களையும் கடந்த உணர்வுக்கும், உணர்வினையும் கடந்த உயிருக்கும் இன்பம் தருகின்றவற்றில் இன்று விழைவு இல்லை; விருப்பம் இல்லை. இன்று பொறிகளின் இன்பத்திலேயே நாட்டம் மிகுதி. செவிக்கினிய சொற்களை விரும்புகிறார்களே தவிர, நலம் தரும் சொற்களை நாடுவதில்லை.


கு.இ.27.