பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அப்பரடிகள் வரலாற்றில் அம்மையின் அருள்நிலை மேம்பட்டு விளங்கவில்லை; சூலை நோய் துன்புறுத்தியது. மாணிக்கவாசகர் வரலாற்றில் அம்மையின் அருளும் நிலை முதல் நிலையாகும்; வலியவந்து ஆட்கொண்ட நிலை, ஆதலால், ‘அம்மையே!’ என்று விளிக்கிறார்.

நாயன்மார்களுக்கு அருளும் நிலையிலும்கூட அம்மையொடு உடனாய நிலையிற்தான் அருளிப்பாடு நிகழ்கிறது. “அருளது சக்தியாகும்” என்பது அருணந்தி சிவம் வாக்கு.

மானிடத்திற்குத் தாய் உற்ற துணை! குழந்தையின் நோய்க்கு, தாய்தான் மருந்துண்டாள். தாய் ஓர் அன்புப் பிறவி! தன்னல மறுப்பே தாயின் பிறவிக்குணம். இந்த உலகில் இறைவனின் கருணை சிறந்தது; மிகமிகச் சிறந்தது. அடுத்த நிலையில் சிறந்தது, தாயின் அன்பே! “கடவுள் எல்லா இடத்திற்கும் வர முடியாமையினாலேயே தாயைப் படைத்தான்” என்று ஆன்றோர் கூறுவர்.

எல்லாரும் எல்லாப் பதவிகளையும் ஏற்க முடியும், வகிக்க முடியும். தாயாக முடியுமா? ஒருக்காலும் முடியாது. தாயின் அன்பே உலகில் சிறந்தது; நிறை மிகுதியும் உடையது. தாய் ஓர் அற்புதமான படைப்பு; புனிதமான பிறப்பு. தாய்க்கு ஒப்பாக யாருளர்? எவரும் இல்லை! எனவே, மாணிக்கவாசகர் அம்மையை முதன்மைப்படுத்துகின்றார்.

“அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!”

என்பார். அம்மையே மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பாள். அருளுவதில் அன்னையே முதல் நிலையில் இருக்கிறாள். உணர்ச்சி தரும் இன்பம் வழங்குவதிலும் அம்மையே முன் நிற்கிறாள்.

எனவே, இருளகற்றி இன்பம் பெருக்கி வாழ்நிலை அருளும் அன்னையை-பராசக்தியை ‘அம்மை’ என்றார்.