பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும்” என்று பேசுகின்றார்.

நால்வர் நெறியிலே, ‘வாழையடி வாழையாக’ வந்து தோன்றியவர் வள்ளலார். நால்வர் நெறியிலே அவருக்கு உயிர்ப்பிடிப்பு இருந்தது. மாணிக்கவாசகரின் குழைவை நாம் அருட்பாவிலே காணலாம்; திருவாசகத்திற்கு ஒரு மறு பதிப்பு அருட்பா என்று கூறலாம். திருவாசகத்தில் இவர் கரைந்து பாடியிருக்கிறார் என்பதை அவரது அருட்பாவிலிருந்து தெளிவாக உணரலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில்கூடச் சொல்லுவார்கள், அவர் திருமணம் நடந்த முதல் நாள் இரவு, வழக்கப்படி கையிலே திருவாசகத்தை எடுத்துக்கொண்டு சென்றார் என்று- வள்ளலாரை வளர்த்தது- அவரை வள்ளலாராக ஆக்கியது- அருட்பா மழையைப் பொழியுமாறு செய்தது- அம்மழை பொழிவதற்கு முகிலாக இருந்தது திருவாசகம் என்றே சொல்லலாம். மாணிக்கவாசகர் காலத்திற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வள்ளலார் தோன்றினார். அதன் பிறகும், தமிழகம் திருந்திவிடவில்லை. மாணிக்கவாசகர் காலத்தில் இருந்ததை விடக் கொஞ்சம் அதிகம் கெட்டுப் போய்த்தான் இருந்தது. மாணிக்கவாசகர் அவதரித்த காலத்திலும் இந்நாடு கெட்டுத் தான் போயிருந்தது.

‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை’ என்று மாணிக்கவாசகர் பாடிய பிறகு, எத்தனை பேர் எவ்வளவு காலமாக இந்தப் பொல்லாத சாதிப் பேயை இல்லாமல் ஒழிக்க முயற்சித் திருக்கிறார்கள்! ஆனால், சாதி மட்டும் இருந்தபடியே தான் இருக்கிறது. ஓர் அங்குலம் கூடக் குறையவில்லை. எனவே, வள்ளலார் நெறிநிற்கிற அன்பர்கள், இந்நாட்டு மக்களை ஆண்டாண்டுக் காலமாகப் பிடித்துக் கொண்டிருக்கிற சாதிப்பேயை விரட்டியடிப்பதில் முழு முயற்சியோடு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சாதிப்பேயை அடியோடு அழித்தொழிக்கும் காலமே வள்ளலாரின் மனம் மகிழும் காலம்.