பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

41


இல்லை, கடவுட் சிந்தனை உண்டாகி அவனுடைய அருள் தடத்தில் சென்றால் திருவருள் வழி ஊன் உருகும்.

ஊன் உருகினால் ஆன்மாவிடத்தில் ஒளி தோன்றும், ஒளி விளங்கும்! அது ஞான ஒளி! இறை ஒளி! ஊனின் அட்டகாசம் நின்று உள்ளொளி பெற்ற ஆன்மாவினிடத்தில் ஆனந்தமாய தேனினைச் சொரிந்து வளர்க்கிறான் இறைவன்! உயிர் இன்புறுகிறது; இன்ப மயமாகிறது. உயிர், இன்பமே வடிவாகிறது. இந்நிலையில் உயிரின் அறியாமை அகல்கிறது; அறிவு விரிவடைகிறது. ஞான ஒளியாகிறது.

இந்த ஞான ஒளி, எல்லையற்ற இன்பத்தைத் தருகிறது. தேனில் ஊறிய பொருள் எதுவும் கெட்டுப் போகாது. அதுபோலத் திருவாசகத்தின் வழி, திருவருள் தோய்ந்த - நனைந்த உயிர்க்கு என்றும் இன்பமேயாம்!

ஒன்று எவ்வளவு நல்லதாயினும் தொடர் கண் காணிப்பு இல்லையெனில் அது கெடும். அதுவும் உயிர் போதிய பாதுகாப்பு இல்லையெனில் கெடும். ஏன்? உயிர் இயல்பிலேயே தொடக்க நிலையிலேயே அறியாமையுடன் - ஆணவத்துடன் தொடர்புடையது. உயிர் தன் முயற்சியினால் திருவருள் துணையால் ஆணவத்தின் செயற்பாட்டை அடக்க முடிகிறதே தவிர, முற்றாக அகற்ற முடிவதில்லை.

ஏன்? உள்ளது போகாது; இல்லது வாராது. இஃதோர் இயற்கை நியதி. உயிருடன் இயல்பாகப் பொருந்தியிருப்பது ஆணவம்; அறியாமை. ஆதலால், ஆணவம் அகலாது. உயிர் முயன்றால், திருவருள்துணை அமையுமாயின் செயலற்றுப் போகச் செய்யலாம்.

இந்த ஆணவத்தைச் செயலற்றுப் போகச் செய்தலே கூட எளிதல்ல. திருவருளின்பத்தில் உயிர் திளைத்து மகிழும் பொழுதும் கூட ஆணவம் தலைகாட்டும்; சேட்டை செய்யும். அந்த நிலையிலிருந்து கூட ஆணவத்தின் செயற்பாட்டால் உயிர் பின்னடைவு பெறுதல் உண்டு.

கு.இ.VIII.4.