பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



குரு தரிசன அமைப்பில் திருப்பெருந்துறையும் திருக்கழுக்குன்றமும் மாணிக்கவாசகரின் அனுபவத்தில் கலக்கின்றன. திருக்கழுக்குன்றத்தில் இறைவனைக் கண்ட நிலை மாணிக்கவாசகர் முதிர்ச்சி அடைந்த நிலை. திருக்கழுக்குன்றத்தை எண்ணும் பொழுது மாணிக்கவாசகருக்கு விருப்பு இல்லை; வெறுப்பு இல்லை.

வாழ்க்கையில் வெறுப்பில்லாத நிலை மட்டும் இருந்தால் போதாது. வெறுப்புணர்வு தனி நிலையில் இருக்கக்கூடாது. விருப்பம் இருந்தால் வெறுப்பும் வரும், வளர்ந்த நிலையில், வெறுப்பு அணுகாத விருப்பம் இருத்தல் கூடும். ஆனால் பொதுவாக விருப்பு-வெறுப்பு இல்லாமல் இருந்தால் நல்லது.

நல்லதன் நன்மையிலும் நாட்டம் இல்லை. தீயதன் தீமையிலும் வெறுப்பு இல்லை. இதுவே இருவினை ஒப்பு. இருவினை ஒத்த நிலையில் - பிறவி வித்துக் காய்ந்துபோன நிலையில் திருக்கழுக்குன்றத்தில் வழிபடுகின்றார். திருப்பெருந்துறைச் சிவனையே தொழும் கற்புக் கடம் பூண்டவர் மாணிக்கவாசகர் என்பதறிக.

மாணிக்கவாசகர் தில்லையை அடைகின்றார். திருவாசகத்தில் தில்லை பாதி என்பர். தில்லையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த பாடல்கள் மிகுதி. இவற்றுள் மிகச் சிறந்த பதிகம் திருக்கோத்தும்பி. திருக்கோத்தும்பிப் பதிகத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு வரலாற்றுண்மையை உணர்த்துகின்றார்.

இன்று நமது திருக்கோயில்களில் பல திருமேனிகள். இவற்றில் சில சிவமூர்த்தங்கள் இடையில் வந்து சேர்ந்தவை. திருக்கோயிலில் பல திருவுருவங்கள் வந்தமையால் நம்மனோர் வழிபாட்டில் கற்பு நெறியே காண இயலாத நிலை; ஒன்றியறிந்து வழிபாடியற்ற இயலாத நிலை.