பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கொத்தும்பீ

(திருக்கோத்தும்பி–18)

என்று பாடுகிறார்.

இத் திருப்பாடலில் அம்மையப்பர் ஓருருவாய் எழுந்தருளியுள்ள காட்சி, பாடிப் பரவப் பெறுகிறது. அம்மையப்பர் ஓருருவாய் நிற்கும் கோலமே தொன்மைக் கோலம் என்று அருளிச் செய்தமையை உணர்தல் வேண்டும்.

தோடும், குண்டலமும், திருநீறும் சூலமும் உடைய அப்பன் வலப்புறமாகவும், பட்டாடையும் தோடும் சந்தனமும் பச்சைக் கிளியும் வளையலும் உடைய அம்மை இடப்புறமாகவும் விளங்கும் திருக்கோலம். நமது சமய நெறியில் அம்மையப்பன் வழிபாடு வளர்வது நல்லது; அது வரலாற்றுடன் இசைந்தது; வாழ்வியலுக்கு இசைந்தது.

சதுரர் யார்?

மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டருளினான்; தன்னையே மாணிக்கவாசருக்குத் தந்தருளி மாணிக்கவாசகரின் உடலிடம் எழுந்தருளினான். மாணிக்கவர்சகரை எடுத்துக் கொண்டான். இருவருக்குமிடையே வாணிகம் நடந்திருக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் மாணிக்கவாசகர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றார். இறைவன் என்ன பெற்றார்?

இந்தப் பரிவர்த்தனையில் யார் சதுரப்பாடு மிகுதியும் உடையவர்? இது மாணிக்கவாசகரின் வினா. மாணிக்கவாசகரே விடையும் தருகிறார். ஆம்! மாணிக்கவாசகர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றார். இறைவன் தம் உடலிடம் எழுந்தருளப் பெற்றார். இந்த இரண்டுக்கும் எளிதில் கைம்மாறு செய்ய இயலாது. ஆதலால் “யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே” என்று விடை கூறுகின்றார்.